உலகச் செய்திகள்

நேபாளத்தில் இராட்சத வெள்ளம் : 538 பேரின் உடல்கள் கண்டுபிடிப்பு

அமெரிக்காவுக்கு பதிலடி: 700 பொருட்களுக்கு 15 முதல் 50 சதவீதம் வரை வரி விதித்த கனடா!

இந்தியா – ரஷ்யா மூலோபாய உறவை ஆழப்படுத்துவதில் மோடியின் பங்கைப் பாராட்டிய புட்டின்

சீன ஜனாதிபதி இந்தியாவுக்கு விஜயம்?


நேபாளத்தில் இராட்சத வெள்ளம் : 538 பேரின் உடல்கள் கண்டுபிடிப்பு

28 Aug, 2026 | 03:45 PM

நேபாளத்தில் ஏற்பட்ட இராட்சத வெள்ளப்பெருக்கு நிலைமையில் மீட்பு மற்றும் தேடுதல் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், இதுவரை 538 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக நேபாளத்தின் தேசிய பேரிடர் குறைப்பு மற்றும் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளது.

மேலும், காணாமற்போனவர்களின் எண்ணிக்கையைப் புதுப்பித்துள்ள அந்த அமைப்பு, 517 வெளிநாட்டவர்கள் உட்பட 977 பேர் இன்னும் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை எனக் கூறியுள்ளது.

புதன்கிழமை (26) ஏற்பட்ட வெள்ளத்தின் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 489 என நேபாள பொலிஸ் உறுதிப்படுத்தியிருந்தது.

மீட்புப் பணிகள் தீவிரமடைந்து வரும் சந்தர்ப்பத்தில், இந்த இரண்டு அமைப்புகளும் தனித்தனியாகப் புதிய விபரங்களை வழங்கி வருகின்றன. 

அதன்படி, தற்போது நேபாளத்தின் தேசிய பேரிடர் குறைப்பு மற்றும் மேலாண்மை முகமை 538 உடல்களை இதுவரை கண்டுபிடித்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது.  நன்றி வீரகேசரி 






அமெரிக்காவுக்கு பதிலடி: 700 பொருட்களுக்கு 15 முதல் 50 சதவீதம் வரை வரி விதித்த கனடா!

26 Aug, 2026 | 12:32 PM

அமெரிக்கா விதித்துள்ள 50 சதவீத சுங்கவரிக்கு பதிலடியாக, அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் 700 பொருட்களுக்கு 15 முதல் 50 சதவீதம் வரை வரி விதிக்க கனடா தீர்மானித்துள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வந்த நிலையில், அமெரிக்கா திடீரென கனடா மீது 50 சதவீத வரியை விதித்தது. இதனால் ஏற்கனவே பதற்றமடைந்திருந்த அமெரிக்கா – கனடா உறவில் மேலும் விரிசல் ஏற்பட்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் வர்த்தகக் கொள்கைகள் மற்றும் கடுமையான நடவடிக்கைகளால் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக முரண்பாடுகள் தீவிரமடைந்துள்ளன.

இந்த வர்த்தக முரண்பாடுகளுக்கு தீர்வு காணவும், அமெரிக்கா விதித்துள்ள வரியை தவிர்ப்பது தொடர்பிலும் வொஷிங்டனில் இரு நாடுகளின் பிரதிநிதிகளுக்கு இடையே அண்மையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. எனினும், அந்த பேச்சுவார்த்தையில் எந்தவொரு இறுதி உடன்பாடும் எட்டப்படவில்லை.

இதனையடுத்து, கனடா மீது 50 சதவீத சுங்கவரி விதிக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்தார். அத்துடன், கனடா தொடர்பில் கடுமையான விமர்சனங்களையும் அவர் முன்வைத்திருந்தார்.

இந்த நிலையில், அமெரிக்காவின் நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில், அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் 700 பொருட்களுக்கு 15 முதல் 50 சதவீதம் வரை சுங்கவரி விதிக்கப்படும் என கனடா பிரதமர் மார்க் கார்னி அறிவித்துள்ளார்.

இந்த புதிய வரி நடவடிக்கை எதிர்வரும் செப்டெம்பர் 8 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, அமெரிக்காவுடன் முன்னர் காணப்பட்ட உறவு மீண்டும் அதே நிலைக்கு திரும்புவதற்கான வாய்ப்பு இல்லை என கனடா பிரதமர் மார்க் கார்னி முன்னதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய இரு நாடுகளும் நீண்டகாலமாக நெருக்கமான வர்த்தக உறவுகளை கொண்டுள்ள நிலையில், தற்போது ஏற்பட்டுள்ள வர்த்தக மோதல் இரு நாடுகளின் பொருளாதார உறவுகளில் மேலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.   நன்றி வீரகேசரி 





இந்தியா – ரஷ்யா மூலோபாய உறவை ஆழப்படுத்துவதில் மோடியின் பங்கைப் பாராட்டிய புட்டின்

25 Aug, 2026 | 12:34 PM

ரஷ்யாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் தனிப்பட்ட கவனத்தை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் பாராட்டியுள்ளார்.

மொஸ்கோவில் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கருடன் இடம்பெற்ற சந்திப்பின்போது புட்டின் இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்தியா – ரஷ்யா இடையிலான வர்த்தகம் கடந்த ஆண்டு சற்று வீழ்ச்சியடைந்த போதிலும், இந்த ஆண்டு மீண்டும் அதிகரித்து வருவதாகக் குறிப்பிட்ட புட்டின், இதற்கு பிரதமர் மோடி இருதரப்பு உறவுகளின் வளர்ச்சியில் செலுத்தி வரும் தனிப்பட்ட கவனமும் முக்கிய காரணமாக அமைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும், பிரதமர் மோடிக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவிக்குமாறு அமைச்சர் ஜெய்சங்கரிடம் கேட்டுக்கொண்ட புட்டின், அவரை விரைவில் சந்திக்க எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இரு தலைவர்களும் விரைவில் நடைபெறவுள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) மாநாட்டின் பக்க நிகழ்வாக சந்திக்கக்கூடும் எனவும், இந்த ஆண்டின் பிற்பகுதியிலும் மீண்டும் சந்திப்பதற்கான வாய்ப்பு உள்ளதாகவும் புட்டின் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா – ரஷ்யா இடையிலான ஒத்துழைப்பு அரசாங்கம், நாடாளுமன்றம் மற்றும் பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் விரிவடைந்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மற்றும் ரஷ்ய துணைப் பிரதமர் டெனிஸ் மான்டுரோவ் ஆகியோர் மேற்கொண்டு வரும் பணிகளையும் புட்டின் பாராட்டியுள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளில் எரிசக்தி மற்றும் உர விநியோகம் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். குறிப்பாக, இந்திய விவசாயிகளின் தேவைகளை கருத்திற்கொண்டு உர விநியோகத்தை அதிகரிக்க ரஷ்யா நடவடிக்கை எடுத்து வருவதாகவும், எதிர்காலத்தில் மேலும் விநியோகங்களை மேற்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் புட்டின் கூறியுள்ளார்.

அத்துடன், அணுசக்தி, உயர் தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளிலும் இந்தியா மற்றும் ரஷ்யா இடையே ஒத்துழைப்பு தொடர்ந்து முன்னேற்றம் கண்டு வருவதாக ரஷ்ய ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

வர்த்தகம், எரிசக்தி, உர விநியோகம், அணுசக்தி மற்றும் உயர் தொழில்நுட்பத்துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் ஆழப்படுத்தும் முயற்சிகளுக்கு மத்தியில் ஜெய்சங்கரின் மொஸ்கோ விஜயம் இடம்பெற்றுள்ளது.

நீண்டகால மூலோபாய உறவை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்தியாவும் ரஷ்யாவும் பல்வேறு துறைகளில் தொடர்ந்து இணைந்து செயல்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.   நன்றி வீரகேசரி 





சீன ஜனாதிபதி இந்தியாவுக்கு விஜயம்?

25 Aug, 2026 | 12:06 PM

இந்தியாவில் நடைபெறவுள்ள 'பிரிக்ஸ்' (BRICS) உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக, சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் அடுத்த மாதம் புதுடெல்லிக்கு விஜயம் மேற்கொள்ள வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

சுமார் ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு அவர் இந்தியாவுக்கு மேற்கொள்ளும் இந்த முதல் பயணம், இரு நாடுகளிடையேயான சீர்குலைந்த உறவை மேம்படுத்துவதற்கான ஒரு நேர்மறையான புதிய தொடக்கமாகப் பார்க்கப்படுகிறது.

கடந்த 2019ஆம் ஆண்டு ஜி ஜின்பிங் இந்தியா சென்றபோது சுமார் 200 அதிகாரிகள் மட்டுமே உடன் சென்றனர். ஆனால், இந்த முறை சுமார் 400 அதிகாரிகள் அடங்கிய பெரிய தூதுக்குழுவுடன் அவர் செல்லக்கூடும் எனத் தெரிகிறது. 

சீன ஜனாதிபதியின் தங்குமிடம் மற்றும் பாதுகாப்பு நெறிமுறைகளை இறுதி செய்யும் பணிகளில் இருநாட்டு அதிகாரிகளும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த ஆண்டு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சீனாவுக்குச் சென்றிருந்தபோதிலும், சமீபத்திய எல்லைப் பிரச்சினை காரணமாக இரு நாடுகளுக்கும் இடையே ராஜதந்திர பதற்றம் நிலவி வந்தது. இச்சூழலில், இந்த உச்சிமாநாட்டைப் பயன்படுத்தி எல்லைப் பாதுகாப்பு மற்றும் நீண்டகாலக் கருத்து வேறுபாடுகளுக்குத் தீர்வு காண இரு தரப்பும் திட்டமிட்டுள்ளன.

இருதரப்பு பேச்சுவார்த்தைக்கான இறுதி அட்டவணை இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்றாலும், பிரிக்ஸ் அமைப்பின் தற்போதைய தலைமைப் பொறுப்பில் உள்ள இந்தியாவுக்கு சீனா முழு ஆதரவை அளிக்கும் என்றும், மாநாட்டை வெற்றிகரமாக நடத்த ஒத்துழைக்கும் என்றும் சீன வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.   நன்றி வீரகேசரி 

இருப்பினும், சீன ஜனாதிபதியின் அதிகாரபூர்வ பயணத் திட்டம் குறித்தும், இந்த சந்திப்பு குறித்தும் இந்திய வெளியுறவு அமைச்சகம் இதுவரை எந்தவொரு கருத்துகளையும் தெரிவிக்கவில்லை.   நன்றி வீரகேசரி 


No comments: