---------------------------------------------------------------------------
மேர்வின்டீ. சில்வாவின் புதல்வன் கலாநிதி தயான் ஜெயதிலக்காவும்
இலங்கையில் மிகவும் பிரபலமானவர். கடந்த அரசாங்கங்களின்
காலத்தில் ரஷ்யா, மற்றும் பிரான்ஸ் நாடுகளுக்கான
இலங்கைத் தூதுவராவும் பணியாற்றியவர்.
இவர் ஒரு காலகட்டத்தில்
வட-கிழக்கு மாகாண சபையிலும் அமைச்சராக இருந்தார்.
அதற்கு முன்னர் இவரும் இலங்கையில் சிறிது
காலம் தலைமறைவாக வாழ நேரிட்டது.
அவ்வாறான தலைமறைவு வாழ்க்கையின்போது
ஒரு பிரபல தமிழரின் கொழும்பு இல்லத்தில்தான்
தங்கியிருந்தார்.
அந்தத் தமிழரும் மிகவும்
பிரபலமானவர்தான். அவர் தோழர் என். சண்முகதாசன்.
இதுபோன்ற பல செய்திகளை
வீரகேசரி – தினக்குரல் மற்றும்
சமகாலம் முதலான
ஏடுகளில் சிரேஷ்ட ஆசிரியராக பணியாற்றிய வீரகத்தி தனபாலசிங்கம் எழுதியிருக்கும் - பத்திரிகைத்துறையில் என் கதை - என்ற
நூலிலிருந்து நாம் தெரிந்துகொள்கின்றோம்.
தனபாலசிங்கம், ஏற்கனவே,
நோக்கு ( தினக்குரல் ஆசிரிய தலையங்கங்கள்) ஊருக்கு நல்லது சொல்வேன், தமிழ் தேசியவாத
அரசியல், ஆகிய நூல்களையும் வரவாக்கியிருப்பவர்.
தோழர் சண்முகதாசனின் கட்டுரைகள், மற்றும் சண்முகதாசன்
நூற்றாண்டு மனப்பதிவுகள் ஆகியற்றையும் வெளியிட்டிருக்கிறார்.
இலங்கையில் தேசிய இனப்பிரச்சினை உக்கிரமடைந்து கலவரங்கள்
தொடங்கிய காலப்பகுதியில் பத்திரிகைத்துறையில் பிரவேசித்தவர். வீரகேசரியில்
தனது
தொழில்சார்ந்த வாழ்க்கையை முதலில் ஒப்புநோக்காளராக ஆரம்பித்தவர். 1977 ஆம் ஆண்டு நடுப்பகுதியில் தென்னிலங்கையில் இனக்கலவரம் நடந்தது. அப்போது, பிரதமராகவிருந்த ஜே.ஆர்.ஜெயவர்தனா “போர் என்றால் போர், சமாதானம் என்றால் சமாதானம்
“ என்று சூளுரைத்தார். இவ்வாறு
நாட்டில் மிகுந்த நெருக்கடி தொடங்கியவேளையிவ் தனபாலசிங்கத்தின் கொழும்பு வாழ்க்கை ஆரம்பமாகிறது.
நாமிருவரும் அவ்வேளையில்
வீரகேசரியில் ஒப்புநோக்காளர்களாக இணைந்தோம்.
அன்று முதல் இற்றை வரையில்
இவருடனான எனது நட்புறவு நீடிக்கிறது.
படிப்படியாக தன்னை இவர்
எவ்வாறு வளர்த்துக்கொண்டார் என்பதையும், இந்நூலில்
நனவிடை தோய்ந்து பதிவுசெய்திருக்கிறார். இந்நூலை
இலங்கையின் மூத்த இடதுசாரித்தோழரும் பத்திரிகையாளருமான (அமரர் பாதிநேசன் வீ. சின்னத்தம்பி
அவர்களுக்கு சமர்ப்பணம் செய்துள்ளார்.
பேராசிரியர் எம். ஏ. நுஃமான்
முகவுரையும், மூத்த பத்திரிகையாளர் டீ. பி.
எஸ். ஜெயராஜ், பேராசிரியர் சந்திரிக்கா சுப்பிரமணியம்,
தெட்சணா மூர்த்தி மதுசூதனன் ஆகியோர் தங்கள் கருத்துரைகளையும் எழுதியுள்ளனர்.
தனது 21 வயதில் வீரகேசரி
பணிமனையில் பிரவேசித்த தனபாலசிங்கத்திற்கு அவ்வேளையில் தலைநகரம் முற்றிலும் புதிது. இவரது தாய்மாமனார் கந்தசாமியின் ( வீரகேசரியின் விளம்பரப்பிரிவு –
உதவி முகாமையாளர் ) தூண்டுதலால் ஒப்புநோக்காளர் பணியை ஏற்கிறார்.