இலக்கியவாதியும் ஊடகவியலாளருமான
நிலாந்தன் எழுதிய பதிவு ஒன்றிலிருந்து முன்னாள்
ஆசிரியரும், தன்னலமற்ற தொழிற்சங்கவாதியுமான
சிவராசா மாஸ்டர் அவர்கள் யாழ்ப்பாணத்தில் மறைந்துவிட்டார் என்ற துயரமான செய்தியை படித்தேன்.
அதனைப்படித்தவேளையில் சிவராசா
மாஸ்டர் அவர்களுடனான முதல் சந்திப்பும், அவருடனான தொடர்பாடல்களும்தான் நினைவுக்கு வந்தது.
அவர் குறித்த அஞ்சலியுடன்,
இந்த நனவிடைதோய்தற் குறிப்புகளை எழுதுகின்றேன்.
இலங்கை சுதந்திரமடைந்த
பின்னர் 1971 ஆம் ஆண்டு தென்னிலங்கையில் ஆயுதக்கிளர்ச்சி நடந்தது. அக்காலப்பகுதியில் ஶ்ரீமாவோ பண்டாரநாயக்கா – கலாநிதி என். எம். பெரேரா
மற்றும் பீட்டர் கெனமன் ஆகியோர் தலைமை தாங்கிய
ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, சமசமாஜக்கட்சி
மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியன இணைந்த கூட்டணி அரசு பதவியிலிருந்தது.
ஆயுதம் ஏந்திய இயக்கமாக ஜனதா விமுக்தி பெரமுன உருவாகி, அதில் அங்கம் வகித்த ஏராளமான சிங்கள இளைஞர்களினால், அந்த கிளர்ச்சி எழுச்சிகொண்டது. எனினும் அரசின் அடக்குமுறையினால் அந்தப்போராட்டம் முறியடிக்கப்பட்டு, பலர்கொல்லப்பட்டனர், மேலும் பலர் சிறைவைக்கப்பட்டனர்.
கிளர்ச்சியில் ஈடுபட்ட
பலர் வெலிக்கடை, போகம்பர, மகஸின், அநுராதபுரம், யாழ்ப்பாணம், உட்பட பல பிரதேசங்களில் அமைந்திருந்த சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டனர்.
பின்னர் அவர்களுக்கு எதிரான
விசாரணைகள் கொழும்பில் நீதியரசர் அலஸ் தலைமையில் குற்றவியல் நீதி ஆணைக்குழுவின் முன்னிலையில் நடைபெற்றது.
அக்காலப்பகுதியில் இலங்கை ஊடகங்களில் அந்த விசாரணைகள் தொடர்பான செய்திகள்
வெளியாகிக்கொண்டிருந்தன. இன்று போல், அக்காலப்பகுதியில் உடனுக்குடன் செய்திகளை படிப்பதற்கான
ஊடக சாதனங்கள் இருக்கவில்லை.
சிறைகளில் தடுத்துவைக்கப்பட்டிருந்த
அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து நாடெங்கும் சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டு கூட்டங்களும் நடந்தன.
இந்த இயக்கம் கொழும்பு மலே வீதியில் அப்போது அமைந்திருந்த இலங்கை
ஆசிரியர் சங்கத்தின் பணிமனையிலிருந்து தொடங்கியது.
தோழர் லீனஸ் திஸாநாயக்கா இந்த இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளராக இருந்தார்.
ஆசிரியர் சங்கத்தின் தலைவராக
தோழர் எச். என். பெர்னாண்டோ, செயலாளாராக தோழர் சித்ரால் ஆகியார் இயங்கினர்.
இச்சங்கத்திலிருந்து, சிங்களத்தில்
குரு ஹண்ட , தமிழில் ஆசிரியர் குரல் , ஆங்கிலத்தில் Teachers Voice ஆகிய பத்திரிகைகள்
வெளிவந்தன.