பதிப்பு: Giri Law Hause, Madurai, Tamil Nadu.
தமிழக
அரசியல் தளத்தில் மிக முக்கியப்பங்கு வகித்த ஒரு அரசியல் தலைவர் முன்னாள்
தமிழக ஜெயலலிதா அவர்கள். அவர் அரசியலுக்கு வந்த நாள் தொடங்கி இவ்வுலகை
விட்டு மறைந்த நாள் வரையிலான அவரது ஒவ்வொரு நடவடிக்கைகளும் வெகுவாக
மக்களின் கவனத்தை ஈர்த்தவை. ஜெயலலிதா என்ற பெண்மணி ஒரு சாதாரண பெண்ணாக
இருந்து, பலரும் புகழும் நடிகையாக வளர்ந்து, பின்னர் தமது தொண்டர்களால்
'அண்ணி' என்றும் பின்னர் 'அம்மா' என்றும் புதுப்பரிமாணம் பெற்ற தகவல்களை
இந்த நூல் வாசகர்களாகிய நமக்கு வழங்குகின்றது.
நம்மைச்
சுற்றிலும் நடக்கும் பல செய்திகள் நாளடைவில் நமது நினைவுகளிலிருந்து
நீங்கி விடுகின்றன. பொதுவாக அவ்வப்போது பேசப்படுகின்ற செய்திகள் மட்டிலும்
தலைதூக்கி அவ்வப்போது தனது இருப்பைக் காட்டும் போது அவை சிறிது பேசப்பட்டு
பின் மீண்டும் நினைவுத் தளத்தின் பின் பக்கத்திற்குச் சென்று விடுகின்றன.
ஜெயலலிதா அம்மையாரைப் பற்றிய நினைவுகளும் அப்படித்தான். ஜெயலலிதா என்றால்
இன்று நமது நினைவில் கண் முன்னே காட்சியளிப்பது ஒரு நடிகை அரசியல்வாதியான
ஒரு நிகழ்வும் பின்னர் அவரது மரணமும், அதன் பின்னனில் இருக்கும்
மர்மங்களுமே. அம்மா என்று அழைத்து காலில் விழுந்து வணங்கியவர்களும்
ஹெலிகாப்டரில் பறக்கும் போதும் கீழே விழுந்து வணங்கியவர்களும் கூட இன்று
அவரது பெயரைக் களங்கப்படுத்தும் முயற்சிகளில் இறங்கி விட்டனர். இந்தச்
சூழலில் செல்வி ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை சரிதத்தின் பல முக்கியச்
செய்திகளையும் நிகழ்வுகளையும், சங்கடங்களையும், சாதனைகளையும்,
குற்றங்களையும், முடிச்சு அவிழ்க்கப்படா மர்மங்களையும் தொட்டுப்
பேசுகின்றது முனைவர் சந்திரிகா சுப்ரமண்யன் அவர்கள் எழுதி யிருக்கும் இந்த
நூல்.
ஸ்ரீரங்கத்தின் ரங்கசாமி ஐயங்கார்
பெங்களூர் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸில் வேலை கிடைத்து சென்றபோது தனது
குடும்பத்தையும் உடன் அழைத்துச் செல்கின்றார். அங்கு மைசூரில் பிரபல
டாக்டர்.ரங்காச்சாரி மகன் ஜெயராமுக்கு மகள் வேதாவைத் திருமணம் செய்து
வைக்கின்றார். ஜெயராம் வேதா தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள். அவர்களில்
ஒருவர் தான் 1948ம் ஆண்டு பிப்ரவரி 28ம் தேதி பிறந்த கோமளவல்லி என்ற
இயற்பெயர்கொண்ட ஜெயலலிதா. பிறக்கும் போது வசதியாக இருந்த குடும்பம் பின்
தந்தையின் ஊதாரித்தனத்தால் மிகவும் கஷ்டப்படும் நிலைக்கு வந்தது.
விமானப்பணிப்பெண்ணாக இருந்த சித்தி அம்புஜா அன்று வித்யாவதி என்ற பெயரில்
தமிழ்ச்சினிமா உலகில் நுழைந்தார். இரண்டு குழந்தைகளையும் காப்பாற்ற
வேதாவும் சினிமா துறையில் காலடி எடுத்து வைத்தார். சந்தியாவாக மாறினார்.
பள்ளிப்படிப்பிலும் நடனத்திலும் மிகத்தேர்ந்தவராக இருந்தார் கோமளவல்லி.
பின்னர் படிப்படியாக திரைப்படம் , மேடை நாடகங்கள் என அவரது வாழ்க்கை
தொடர்ந்தது. ஒய்.ஜி.பார்த்தசாரதியின் ஆங்கில மொழி நாடகத்தில் அப்போது
வாய்ப்பு வந்தது. The Hold truth, The House of the August Moon ஆகிய
நாடகங்களில் ஜெயலலிதா நடித்தார். அப்போது அவரோடு நடித்தவர்களில் சோ வும்
ஒருவர். இவர்கள் நட்பு அன்றிலிருந்து இறுதி வரை தொடர்ந்தது. பின்னர் கன்னட
மொழிப்படம் எனத்தொடங்கி தமிழ்ப்பட உலகில் மிக அதிக சம்பளம் பெற்ற
கதாநாயகியாகவும் வலம் வந்தவர்.














