எழுத்தும் வாழ்க்கையும் - அங்கம் – 03 விமர்சனங்கள் – எதிர்வினைகளின் ஊடாக பயணித்த படைப்புகள் ! முருகபூபதி


எனது முதலாவது சிறுகதை கனவுகள் ஆயிரம் 1972 ஜூலை மாதம் முதல் வாரத்தில் மல்லிகையில் வெளிவந்ததைத் தொடர்ந்து இரண்டாவது கதையாக நான் எழுதியது அந்தப்பிறவிகள்.
இச்சிறுகதையும்  நீர்கொழும்பு பிரதேச கடற்றொழிலாளர்  சமூகத்தின் பேச்சுவழக்கிலேயே அமைந்திருந்தது. இதனை பூரணி காலாண்டிதழுக்கு அனுப்பியிருந்தேன்.
அதனை மூலப்பிரதியிலேயே படித்திருந்த இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் வார இதழின் ஆசிரிய பீடத்திலிருந்த நண்பர் மு. கனகராஜன் கேட்டுக்கொண்டதற்கு இணங்கி மற்றும் ஒரு சிறுகதையை எழுதி அவரிடம் கொடுத்தேன். அதன்பெயர் தரையும் தாரகையும். இச்சிறுகதையும் 1972 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 29 ஆம் திகதி வெளியானது.
பூரணி காலாண்டிதழ். ஆகையால் அதற்கு அனுப்பியிருந்த அந்தப்பிறவிகள் சிறுகதை, அதன் இரண்டாவது இதழிலேயே வெளியானது. அம்மாதம் ( 1972 )  ஒக்டோபர் என நினைக்கின்றேன்.
கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக  அமைந்திருந்த ராஜேஸ்வரி பவானுக்கு நான் அடிக்கடி செல்வது வழக்கம். அங்கேதான் ஈழத்து இலக்கிய இதழ்களையும் தமிழக நூல்களையும் வாங்குவேன். அதனால் அதன் உரிமையாளரின் புதல்வனும் எனக்கு நன்கு அறிமுகமானவர்.
அவர் 1977 ஆம் ஆண்டில் நடந்த இனக்கலவரத்தின்போது வெள்ளவத்தையில் கொல்லப்பட்டார்.  அவரை 1972 முதல் நன்கு அறிவேன்.
பூரணி இதழில் எனது சிறுகதை வெளியாகியிருக்கும் தகவலையும் அவர்தான் எனக்குச்சொன்னார். அந்த சைவ உணவகத்தில் காசாளர் மேசைக்கு முன்பாக பரப்பி வைத்திருந்த இலக்கிய இதழ்களுக்கு மத்தியில் பூரணி இரண்டாவது இதழையும் கண்டு வாங்கினேன்.  அதன் முகப்பு அட்டையில் பெனடிக்ற் பாலன், சட்டநாதன், கிருஷன் சந்தர் ஆகியோருட்பட  நன்கு  அறியப்பட்ட  மேலும் சில   எழுத்தாளர்களின் பெயர்களுடன் எனது பெயரும்  இடம்பெற்றிருந்தது கண்டு ஆச்சரியப்பட்டேன்.

கவிஞர் அம்பி எழுதும் சொல்லாத கதைகள் – அங்கம் - 24 குழந்தை இலக்கியம் “ கொஞ்சும் தமிழ் “ பெற்ற சாகித்திய விருது !


எமது தாயகம் இலங்கையில், எழுத்தாளர்கள் – கலைஞர்கள்
மத்தியில்  இலக்கியம் மற்றும் கலைத்துறைப்பணிகளில் சிறந்த சேவையாற்றியவர்களுக்கு அரச மட்டத்தில் பாராட்டு விருதுகள் வழங்கப்படுவதை அறிவீர்கள்.
அதற்காக இலங்கை கலாசார அமைச்சினால் சாகித்திய மண்டலம் என்ற அமைப்பும் தோன்றியிருந்தது. இந்த அமைப்பு கலாசார திணைக்களத்தின் கீழ்  வருகிறது.
1967 ஆம் ஆண்டு நான் எழுதியிருந்த கிறீனின் அடிச்சுவடு என்ற நூலுக்கும் சாகித்திய விருது கிடைக்கவிருப்பதாக ஒரு செய்தி எனது காதில் விழுந்தது.  அச்செய்தி நம்பகமாகவும் இருந்தது.
கலாசார திணைக்களத்தில் செயலாளராக அச்சமயம் பணியிலிருந்தவர் கே.ஜி. அமரதாச.  இவர் தமிழ் அபிமானியாவார். தானாகவே தமிழை கற்றுக்கொள்ளவும் பேசவும் விரும்பியவர்.
பின்னாளில் இவர், மகாகவி பாரதியாரின் சில கவிதைகளையும் சிங்கள மொழியில் பெயர்த்தவர்.  இவர் பற்றி எனது நண்பர் முருகபூபதி எழுதிய கட்டுரைகள்  மும்மொழியிலும் வெளிவந்துள்ளதையும் அறிவேன்.
இலங்கைத் தமிழ் எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்களுடனும் நல்லுறவுகொண்டிருந்தவர்தான் அமரதாச.
ஒரு நாள் அவர்,  கொழும்பில் என்னை வீதியோரத்தில் கண்டுவிட்டு, “  அம்பி… உங்களுக்கு ஒரு நல்ல செய்தி இருக்கிறது.  விரைவில் அச்செய்தி உங்களைத் தேடி வரும்  “ என்று புதிர்போட்டார்.
 “ என்னவென்று சொல்லுங்கள் ? “  எனக்கேட்டேன்.
 “ அம்பி, நீங்கள் எழுதியிருக்கும் கிறீனின் அடிச்சுவடு   புத்தகத்தை சாகித்திய மண்டலம் பரிசுக்குத் தெரிவுசெய்துள்ளது. விரைவில் உங்களுக்கு கடிதம் வரும். “  என்றார்.
 “ அப்படியா… சரி…. வரும்போது வரட்டும்  “ என்று சொல்லிவிட்டு, சிறிது நேரம் அவருடன் உரையாடி மகிழ்ந்துவிட்டு அகன்றேன்.
ஆனால், அவர் சொன்னவாறு எனக்கு கடிதம் ஏதும் வரவேயில்லை. நான் அதற்காக காத்திருக்கவும் இல்லை.

மழைக்காற்று ( தொடர்கதை ) - அங்கம் 46 முருகபூபதி

நாட்கள் சக்கரம் பூட்டி விரைந்து ஓடிவிட்டதாகவே அபிதாவின் மனதிற்குப்பட்டது. நிகும்பலையூருக்கு வந்து சேர்ந்தது,  அதன்பின்னர் தொடர்ச்சியாக நடந்துவிட்ட சம்பவங்கள், இந்த வீட்டில் காணக்கிடைத்த மனிதர்கள், அவர்களின் இயல்புகள், அவர்களால் சொல்லப்பட்ட கதைகள், அவளாகத் தெரிந்துகொண்ட கதைகள்….
முன்பொரு காலப்பகுதியில் வன்னிபெருநிலப்பரப்பெங்கும் பெற்றோருடனும் உறவுகளுடனும், திருமணத்தின் பின்னர் கணவன், குழந்தையுடனும் அலைந்துழன்று , போர் முடிந்ததோடு, அனைத்துறவுகளும் அற்றுப்போன வேளையில்  தேடிவந்து தஞ்சமடைந்த இடத்தில் சந்திக்கநேர்ந்த அனுபவங்கள் அனைத்தையும் மனதில் அசைபோட்டுக்கொண்டு,  இறுதியாக விடைபெற்றுச்சென்ற ஜீவிகாவின் பெரியப்பா சண்முகநாதனை ஒரு கணம் நினைத்துப்பார்த்தாள்.
யாழ்ப்பாணத்திலிருந்து திரும்பியதும் அவரிடம் காணப்பட்ட மாற்றங்களிலிருந்து,  ஏதோ புதிய ஞானம் பெற்றவராகவே அவர் அவளுக்குத் தென்பட்டார்.
விமானநிலையம் செல்லுவதற்கு முன்னர்,  வீட்டின் பின்வளவுக்கு அழைத்து அவர் தன்னுடன் பேசிய பாங்கு, மேலும் அவர் சில நாட்களுக்கு இங்கே நின்றிருக்கலாமே எனத் தோன்றச்செய்தது.
 “ அபிதா… இம்முறை பயணத்தில்  யாழ்ப்பாணத்தில்  நின்றவேளை  நான் கண்ட தேர்தல் கூத்துக்களைப்பார்த்தபோது, உன்னையும் உன்னைப்போன்று கணவன்மாரையும் மகன், மகள்மாரையும் தேடிக்கொண்டிருக்கும் தாய்மார்தான் அடிக்கடி நினவுக்கு வந்தார்கள்.
எமது தமிழ்இனம் சபிக்கப்பட்ட சமூகமோ என்றும் எண்ணத்தோன்றியது.  இந்த நாட்டுப்பிரச்சினையை காரணம் காண்பித்து நாமெல்லாம்  வெளிநாடுகளுக்குத் தப்பி ஓடிவிட்டோம்.  ஓடமுடியாதவர்கள் கிடைத்ததை வைத்து காலத்தை ஓட்டுகிறார்கள்.
வெளிநாடு சென்ற உறவினர்களின் வெளிநாட்டு வீடுகளின்  காணிகளில் ஏதோ காசுமரம் முளைத்திருக்கிறது என்ற எண்ணத்தில்தான் அங்கே பலரும் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.  அவர்கள்தான் அப்படியென்றால், இம்முறை தேர்தலுக்கு நிற்கும் எமது தமிழ் அரசியல்வாதிகளும் வெளிநாட்டு உறவுகளின் நிதியாதரவுடன்  பத்திரிகைகளில் முழுப்பக்கம், அரைப்பக்கம், கால் பக்கம் விளம்பரங்கள் வெளியிட்டு வாக்கு வேட்டையில் ஈடுபடுகிறார்கள்.
நாடாளுமன்றத்திற்கு செல்லவேண்டிய பிரதிநிதிகளின் எண்ணிக்கையுடன், தேர்தலில் நிற்பவர்களின் எண்ணிக்கையை ஒப்பிட்டுப்பார்த்தால் சிரிப்புத்தான் வந்தது.  தோற்போம் எனத் தெரிந்துகொண்டே கட்டுப்பணம் செலுத்தி, இலட்சக்கணக்கில் செலவிட்டு விளம்பரம் செய்கிறார்கள்.

புகலிடத்தமிழ் இலக்கியத்தில் அவுஸ்திரேலியாவின் வகிபாகம் - அங்கம் 06 ( மதுரை உலகத் தமிழ்ச்சங்கமும் அவுஸ்திரேலியத் தமிழ் வளர்ச்சி மன்றமும் இணைந்து நடத்திய காணொளி ஆய்வரங்கில் சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரை ) அவுஸ்திரேலியாவில் கவிதை இலக்கியம் முருகபூபதி


" கவிதையாக்கங்குறித்து முரண்பட்ட இரண்டு எண்ணங்கள்


எம்மிடையே நிலவுகின்றன. இயல்பாகச் சிலருக்கு அமைந்த ஒருவகைப் படைப்பாற்றலின் வெளிப்பாடே கவிதை என்பர் ஒரு சாரார். இலக்கண இலக்கியங்களை கற்றுத்தேர்ந்தவர்கள், பயிற்சியினாற் பாடுவது கவிதை என்பர் மற்றொரு சாரார். இவ்விரு கூற்றுக்களிலே ஒன்றே உண்மை என்று நாம் ஏற்கவேண்டியதில்லை. அதுமட்டுமன்று, ஒன்றை மாத்திரம் பிரதானப்படுத்துவது, உண்மையைத்தேடும் முயற்சிக்கு வீணே வரம்புகட்டுவதுமாகும்."  இவ்வாறு நான்கு தசாப்தங்களுக்கு முன்பே, பேராசிரியர் க. கைலாசபதியும் கவிஞர் இ.முருகையனும் இணைந்து எழுதியிருக்கும் கவிதை நயம் என்னும் நூலின் தொடக்கத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

கவிதைக்கு மிகவும் முக்கியம் எளிமை. அந்த எளிமை திரைப்படப்பாடல்களில் மலினப்பட்டது வேறு விடயம். தமிழ்நாட்டில், பாரதியைத்தொடர்ந்து பாரதிதாசனும் , பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரமும், கம்பதாசனும், கண்ணதாசனும்  வாலியும்  கவிதைக்கு மற்றும் ஒரு பரிமாணம் வழங்கியமை போன்று, இலங்கையில்  ஈழத்து பூதன் தேவனார் முதல் கவிஞர்கள் மஹாகவி உருத்திரமூர்த்தி, இ.முருகையன், நுஃமான், நீலாவணன், மு. பொன்னம்பலம், மு.தளையசிங்கம்,  அம்பி, நாகராஜன், அ.ந. கந்தசாமி, சில்லையூர் செல்வராசன், கே. கணேஷ், சி.வி. வேலுப்பிள்ளை  உட்பட மேலும் பல மூத்த கவிஞர்கள் கவிதைத்துறையை வீச்சுடன் முன்னெடுத்தனர்.
இவர்களில் மஹாகவி உருத்திரமூர்த்தி " குறும்பா" என்ற வடிவத்தை அறிமுகப்படுத்தியிருந்தார்.
பின்னாளில்,  இலங்கையில் மருதூர்க்கனி,   சோ. பத்மநாதன்,  சேரன், வ.ஐ. ச. ஜெயபாலன், ஊர்வசி, அனார், ஜவாத்மரைக்கார், ஜின்னா ஷரிப்புத்தீன் ,  அன்புடீன்,  முத்துமீரான், மொழிவரதன்,  மேமன்கவி, சித்தாந்தன், கருணாகரன், காவ்யன் விக்னேஸ்வரன், முதலான எண்ணிறைந்த கவிஞர்கள் கவிதைத் துறைக்கு வளம் சேர்த்தனர்.  அவர்களின்  பெயர்ப்பட்டியல் நீளமானது.
இலங்கையில் 32 நாடுகளைச்சேர்ந்த ஆயிரம் கவிஞர்களின் கவிதைகளும் தொகுக்கப்பட்டு வௌியாகியிருக்கிறது.
இலங்கையிலும்   தமிழ்நாட்டிலும்  1970-1980  காலப்பகுதியில் புதுக்கவிதை எழுச்சிமிக்க   இலக்கியமாக     பேசப்பட்டது.  தமிழ்நாட்டில்    வானம்பாடி    கவிஞர்களாக     வீச்சுடன்   எழுதவந்த                   வைரமுத்து,     மேத்தா, அப்துல்ரஹ்மான்,    அக்கினிபுத்திரன்,  மீரா,    சிற்பி, தமிழ்நாடன்,   தமிழவன், தமிழன்பன்,  கோவை  ஞானி,                    வைதீஸ்வரன்,பரிணாமன், புவியரசு,   இன்குலாப், கங்கைகொண்டான், உட்பட     பலரின்  புதுக்கவிதைகளின் தாக்கம் இலங்கையிலும் நீடித்தது.

அதேவேளை சிதம்பர ரகுநாதன்,  கலைமகள்  கி.வா. ஜகந்நாதன் முதலானோர் புதுக்கவிதையை      ஏற்காமல் எதிர்வினையாற்றினார்கள்.     வானம்பாடிகள்     இதழ்     சில       வருடங்கள் அழகான    வடிவமைப்புடன்    வெளிவந்தது. இலங்கையில்    1970 இற்குப்பின்னர் ஏராளமான  இளம்தலைமுறை    படைப்பாளிகள்     முதலில்         புதுக்கவிதை கவிஞர்களாகவே    அறிமுகமானார்கள்.
ஆங்கிலத்தில் New Poetry - Modern Poetry என அழைக்கப்பட்ட வடிவம் தமிழுக்கும் அறிமுகமானது. அத்துடன் ஜப்பானிய ஹைக்கூ கவிதைகளும் தமிழ்க்கவிஞர்களுக்கு நெருக்கமாகின. சீர், தளை, அடி, தொடை முதலான வரையறைகளை கொண்டிராமல் புதுக்கவிதை நவீனத்துவம் பேசியது.

மஹாகவி உருத்திரமூர்த்தி புதியதொருவீடு, கோடை முதலான கவிதை நாடகங்களை எழுதியிருப்பவர். தற்போது அவுஸ்திரேலியா சிட்னியில் வதியும் கவிஞர் அம்பியும், வேதாளம் சொன்ன கதை, யாழ்ப்பாடி, அன்னம் விடு தூது முதலான கவிதை நாடகங்களை வரவாக்கியிருப்பவர்.  கவிஞர்கள் கவியரங்குகளிலும் பங்குபற்றுவதனால், கவியரங்கப்பாடல்கள் தொகுதிகளும் வாசகர் பார்வைக்கு கிட்டியிருக்கின்றன. இலங்கையில் சில்லையூர் செல்வராசன் ஊரடங்குப்பாடல்கள் என்ற வடிவத்தை அறிமுகப்படுத்தினார்.

எங்கள் ராணி தங்கராஜாவுக்கு நேற்று 92 வயது ! ஆசுவி கல்லடி வேலனின் பேத்தி !! ஒரு சிறைக்கைதியின் கதையை எழுதிய எழுத்தாளர் !!! முருகபூபதி




சந்தர்ப்பவசமாக சிறைக்குச்சென்று  அங்கிருந்தும்  எழுதிய   எழுத்தாளர்களைப்பற்றியும் ,  சிறைச்சாலை வாழ்க்கை பற்றி நாவல் எழுதியவர்களைப்பற்றியும்   அறிந்திருப்பீர்கள்.
ஜெயகாந்தனின் காவல் தெய்வம், சி. ஏ. பாலனின் தூக்குமரநிழலில் முதலான நாவல்கள், கவிஞர் கண்ணதாசனின் மாங்கனி காவியம், சுப. வீரபாண்டியனின் அது ஒரு பொடா காலம் ,  பண்டிதர் ஜவஹர்லால் நேரு தமது மகள் இந்திராவுக்கு சிறையிலிருந்து  எழுதிய கடிதங்களின் தொகுப்பு உலகசரித்திரம்,  நெல்சன் மண்டேலா எழுதிய Long Walk to Freedom , இலங்கையில் புஸ்பராணி எழுதிய அகாலம், அஜித்போயாகொட புலிகளின் சிறையிலிருந்த அனுபவங்களை எழுதிய நீண்டகாத்திருப்பு உட்பட பல நூல்கள் சிறைபற்றி பேசியிருக்கிறது.
இந்தப்பதிவில்,  ஒரு சிறைக்கைதியின்  சரிதையையே கதையாக எழுதிய ஒரு பெண்மணி பற்றித்தான் உங்களுக்கு சொல்லப்போகின்றேன்.
அவர்தான் திருமதி புஸ்பராணி தங்கராஜா.  அவரை ராணி தங்கராஜா என்றுதான் அழைப்போம். நேற்று ஜூலை 28 ஆம் திகதி அவருக்கு 92 வயது.
அவர் தற்போது மெல்பனில் Burwood என்னுமிடத்தில் ஒரு முதியோர் காப்பகத்திலிருந்தவாறு கடந்த காலங்களை நனவிடைதோய்ந்து  பேசிக்கொண்டும் எழுதிக்கொண்டும் இயங்கிவருகிறார்.
ஈழத்தின் மூத்த அறிஞரும் உடனுக்குடன் கவிபுனையும் ஆற்றல்  மிக்கவரும் யாழ்ப்பாண வைபவ  கௌமுதி ( History Of Jaffna ) எழுதியவருமான ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளையின் பேத்தியுமான புஸ்பராணி அவர்கள் 1928 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 28 ஆம் திகதி, வடபுலத்தில் யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கில், வயாவிளான் கிராமத்தில் பிறந்தவர்.
அமெரிக்க மிஷன் பாடசாலை, கல்லடி வேலுப்பிள்ளை வித்தியாசாலை, உரும்பராய் சந்திரோதயா வித்தியாலயம் ஆகியவற்றில் கற்று,  மேற்கல்வியை மருதனாமடம் இராமநாதன் மகளிர் கல்லூரியிலும் பெற்றவர்.  பின்னர் ஆசிரியையாகவும் பணியாற்றியவர்.

அயோத்தி தீட்சிதருக்கு கொரோனா தொற்று

.

அயோத்தி: ராமர் கோயில் பூமி பூஜைகளுக்கான சடங்குகள் குழுவில் இருக்கும் தீட்சிதர் மற்றும் பணியிலிருந்த 15 போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

உ.பி., மாநிலம் அயோத்தியில், வரும், 5ல், அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை எனப்படும் அடிக்கல் நாட்டு விழா, கோலாகலமாக நடக்க உள்ளது. பிரதமர் மோடி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டுகிறார். கொரோனா பரவல் காரணமாக மொத்தம் 200 பேர் மட்டுமே இந்த பூமி பூஜையில் கலந்து கொள்ளவுள்ளதாக அறக்கட்டளை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது

மேலும், பக்தர்கள் யாரும் அயோத்தி வர வேண்டாம் என்றும், அடிக்கல் நாட்டு விழா டிவி, இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என்பதால் மக்கள் வீட்டிலிருந்து டிவியில் காணலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பூமி பூஜைகளுக்கான சடங்குகள் குழுவில் அங்கம் வகிக்கும் தீட்சிதர் ஒருவருக்கும், அங்கு காவல் பணியிலிருந்த 15 போலீசாருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

nantri https://www.dinamalar.com/

அரும்பொன்று கருகியது - செ .பாஸ்கரன்

.

More than 80 children under two-years-old test positive for COVID-19 in single US county

மரணித்த குழந்தை நேற்றைய செய்தி கேட்டதில் எழுதியது.



அரும்பொன்று மலர்ந்து
ஆகிய நாட்களோ தொண்நூறு
தாயின் மடியில் தவழ்வதற்கு
விழுந்த சிறு குஞ்சு
ஒன்பது மாதங்கள்
காத்திருந்த அன்னையவள்
கேட்டாள்
பாலகனின் அழுகுரலை
முத்தமழை பொழிந்தாள்
முகத்தோடு முகம் வைத்தாள்
பட்டுத்துணியின் வழுவழுப்பு
அவன் சின்ன உடம்பில் தெரிகிறது
ஆசையுடன் அரவணைத்து
பாலூட்டி
பார்த்து ரசித்திருந்தாள்
சிறு தும்மல்
மெல்ல சிணுங்குமொலி
கணச்சூடு கண்டது போல்
உடல் சூடு ஏறியது
குளிராக இருக்குமென
கம்பளியால் மூடிவிட்டாள்
உறக்கம் கொள்ளாமல்
விடியும் இரவுதனைக் கடந்தாள்
மருத்துவரை தேடி
மருந்தொன்று வேண்டுமென்றாள்
கொரோனா குழந்தைக்கு
தனிமையில் விடு என்றார்
பிஞ்சுக் கரமிரண்டும் மூடிக்கிடக்க
காற்றைத் தேடி
எழுகின்ற மார்பகங்கள்
விம்மித தணியும் வேதனைத் தீ
என்ன கொடுமை
இளம் தளிரை
தீயில் இட்டது யார்
விலகி இரு என்றசெய்தி
காற்றில் மிதக்கிறது
கேட்பதட்கு யாருமில்லை
சிறு குழந்தை
சிரிப்பின்றிக் கிடக்கிறது



ஆடிப்பூரம் உற்சவம் - சிட்னி ஸ்ரீ துர்க்கை அம்மன் திருக்கோயில் - தேர்த் திருவிழா- 24/07/2020






அஞ்சலிக்குறிப்பு: கோவை ஞானி நினைவுகள் மனக்கண்ணால் இலக்கியம் பேசியும் எழுதியும் இயங்கிய ஆளுமை ! முருகபூபதி


ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் கோயம்புத்தூரில்  மாலைநேர தனது
வீதியுலாவுக்கு என்னை அழைத்துச்சென்ற மூத்த இலக்கிய விமர்சகர் கோவை ஞானி பற்றிய நினைவுகள் மனதில் அலைமோதுகின்றன.

இம்மாதம் ( ஜூலை )  முதலாம் திகதிதான் அவர் தமது  85 வயது அகவையை நிறைவுசெய்துகொண்டு,  அடுத்த கட்டத்திற்கு  நகர்ந்தவர்.

2013 ஆம் ஆண்டு தமிழகம் சென்றிருந்தபோது,  யுகமாயினி சித்தனுடன், சென்று அவரைப்பார்த்துவிட்டுத் திரும்பி, ஒரு பதிவும் எழுதியிருக்கின்றேன்.

அன்றைய தினம் பசுமையானது.   நெடும்பகல் பொழுது.  முதல் நாள் இரவு கோயம்புத்தூரில் இறங்கி,  சித்தன் இல்லத்தில் தங்கிவிட்டு மறுநாள் காலை ஞானியைப் பார்க்கப்புறப்பட்டேன். வழித்துணை சித்தன்.
இலக்கிய உலகில் நான் பிரவேசித்த காலப்பகுதியில் எனக்கு இரண்டுபேரின் பெயர்கள் சற்று மயக்கத்தை கொடுக்கும். ஒருவர் பரீக்ஷா ஞாநி. மற்றவர் கோவை ஞானி.
பரீக்ஷா ஞானி நாடக எழுத்தாளராக இயக்குநராக பிற்காலத்தில் பத்திரிகையாளராக எனக்கு அறிமுகமானவர். பல வருடங்களுக்கு முன்னர் அவர் அவுஸ்திரேலியாவுக்கு புறப்பட்டு வந்தபோது, சுபமங்களா ஆசிரியரிடம் எனது தொலைபேசி இலக்கத்தை பெற்றுவந்து குவிண்ஸ்லாந்து மாநிலத்திலிருந்து தொடர்புகொண்டார். நான் அப்போது “ நீங்கள் பரீக்ஷா ஞாநியா, அல்லது கோவைஞானியா?” என்று கேட்டதும்  தற்போது நினைவுக்கு வருகிறது.
இன்று இரண்டுபேரும் இல்லை. யுகமாயினி சித்தனும் இல்லை. வெறுமை சூழ்ந்திருக்கும் உணர்வோடுதான்  கோவை ஞானியை  மீண்டும் நினைவுகூருகின்றேன்.
வீரகேசரி வாரவெளியீட்டுக்குப் பொறுப்பான ஆசிரியர் பொன்.ராஜகோபால்  எனக்கு இலக்கியப்பலகணி பத்திகளை எழுதுவதற்கு ரஸஞானி என்ற புனைபெயரைச்சூட்டியது பற்றி அன்று  கோவை ஞானியிடம் சொன்னபோது,   வாய்விட்டுச்சிரித்து,   “ மற்றும் ஒரு ஞானியா..?  “ எனக்கேட்டவர்,  இன்றில்லையென்றாகிப்போனது ஆழ்ந்த துயரத்தை தந்தாலும், நீண்ட நெடுங்காலமாக கண்பார்வையுமின்றி, ஆத்மபலத்துடன்  இயங்கிவந்து,                  “  இனிப்போதும்  “ என்று அவர் விடைபெற்றிருப்பதாவே கருதிக்கொண்டு, மனதை தேற்றமுடிகிறது.

தமிழுக்கும் அமுதென்று பெயர் !


தமிழ் தொன்மையான மொழி என்பது ஆய்வாளர்களின் கணிப்பு. பல உலக மொழிகளுக்கெல்லாம் முன்னோடியானது.  அதனால்தான் மகாகவி பாரதி,  “  யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்   “ என்று பாடினார். அவரது தாசன், பாரதி தாசன்,  “  தமிழுக்கும் அமுதென்று பெயர்   “ எனப்பாடினார்.
இந்த இணைப்பில், தமிழின் தொன்மையை வேற்று நாட்டுப்பெண்மணி, உலக மொழிகளின் வரலாற்றுப்பின்னணியுடன் ஆதாரங்களுடன் விளக்குகிறார்.  அவசியம் பாருங்கள். மற்றவர்களுடன் பகிருங்கள். 


சிறிலங்காவின் பாராளுமன்றத் தேர்தலும் தலைப்பு செய்தியாக்கப்படும் தமிழீழ விடுதலைப்புலிகளும் - 2 பரமபுத்திரன்


ஒவ்வொரு தேர்தல் வரும்போதும், தமிழர்களின் இருப்பு நிலை நிறுத்தப்படவேண்டும், உலகுக்கும், சிங்கள மக்களுக்கும் நாங்கள்  யாரென்று காட்டவேண்டும், தமிழ் மக்களின் ஒருமித்த பலத்தை நிரூபிக்கவேண்டும், என்ற முக்கிய கருப்பொருள் முன்வைக்கப்படும். தமிழர்களும் இந்த வசனங்களை உண்மையென நம்பி  போடு புள்ளடி என்று வாக்களிப்பர். சிங்கள அரசுகள், அரசியல்வாதிகளின் புத்திசாலித் தனமான செயல்பாடுகளின் விளவுகளால் இன்று தமிழர்கள் பங்களிப்பு  அற்ற தலைமையை  உருவாக்கி நாட்டினை ஆளும் நிலைக்கு சிங்கள ஆட்சியாளர்கள் வந்துவிட்டார்கள். ஆனால்   தமிழ்மக்களின் அரசியல் பலமும் போய், நிலமும் குறுகி, மொழியும் தளர்ந்து, வாழ்ந்தால் போதும் என்ற நிலைதான்   தமிழர்களுக்குக் கிடைத்த முடிவு என்று சொல்லலாம்.     

பொன்விழா ஆண்டில் இந்த படங்கள் 10 - காலம் வெல்லும் - சுந்தரதாஸ்

.

 தமிழ் திரையுலகில் பிரபல ஒளிப்பதிவாளராக திகழ்ந்தவர் கர்ணன். சாரதா, கற்பகம். கைகொடுத்த தெய்வம் போன்ற பல குடும்ப கதைகளை அடிப்படையாகக் கொண்டு உருவான படங்களை ஒளிப்பதிவு செய்த கர்ணன் 1970 ஆம் ஆண்டு படத் தயாரிப்பாளராகவும், நெறியாளராகவும் அவதாரம் எடுத்தார் அவ்வாறு அவர் டைரக்ட் செய்த முதல் படத்தை குடும்ப கதையாக எடுக்காமல் கவ்பாய் பாணியிலான ஆக்ஷன் படமாக உருவாக்கினார் கர்ணன் . அப்படி கர்ணன் உருவாக்கிய படம்தான் காலம் வெல்லும்.

இது போன்ற படங்களில் கதாநாயகனாக நடிப்பதற்கு என்று இருந்த ஒரே நடிகர் ஜெய்சங்கர் எனவே அவரையே கதாநாயகனாக்கி படத்தை உருவாக்கினார் . தலையில் தொப்பி இடுப்பில் துப்பாக்கி பயணம் செய்ய குதிரை என்று ஓர் ஏற்பாட்டுடன் கதாநாயகனை படம் முழுவதும் உலாவ விட்டார். அவரின் எதிர்பார்ப்பிற்கு குறை வைக்காமல் ஜெய்சங்கரும் கவ்பாய் வேடத்தில் நடித்து அசத்தி இருந்தார்.


உயர்நிலையாய் அமையாதே ! மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா .... மெல்பேண் ... ஆஸ்திரேலியா


அரசியல் பிழைத்தோர்க்கு
       அறமேகூற் றாகுமென்று
அன்றுரைத்த காப்பியத்தை
      படிக்கிறோம் விளக்கிறோம்
பட்டிமன்றப் பொருளாக்கி
      பலவாறு பேசுகிறோம்
கருத்ததனை மட்டுமே
      கருத்திருக்கத் தவிர்க்கிறோம் !

ஒருவனுக்கு ஒருத்தியென
      உரைக்கவந்த காப்பியத்தை
வீட்டிலும் படிக்கிறோம்
     கோவிலிலும் விளக்குகிறோம்
காப்பியத்து நாயகனை
     கடவுளாக்கிப் போற்றுகிறோம்
நாயகனின் கருத்தைமட்டும்
      நட்டாற்றில் விட்டுவிட்டோம் !

நாலுமிரண்டும் சொல்லுக்குறுதி
       நம்நினைவில் பதிந்திருக்கு
நாலையும் தொலைத்தோம்
      இரண்டையும் ஒதுக்குகிறோம்
வேலிக்குச்  சாட்சியாய்
      ஓணானும் வருவதுபோல்
வேண்டாத பலவற்றை
      துணையெனவே வைத்துள்ளோம் !

இறுதிவரை வாசித்தார்- ஞானியின் உதவியாளர் ஜோதிமீனா பேட்டி

.


தமிழ்நாட்டில் கோவை ஞானி அளவுக்குத் தீவிரமாகத் தொடர்ந்து வாசித்துவந்தவர்கள் இருக்க முடியாது. தமிழ் - ஆங்கிலம் இரண்டிலும் தேடித் தேடி நூல்களை வாசித்தவரைப் பார்வையிழப்பும்கூட ஒன்றும் செய்ய முடியவில்லை. உதவியாளர்களை அமர்த்திக்கொண்டு வாசிக்கலானார். ஜோதிமீனா அப்படி 13 ஆண்டு காலம் ஞானிக்கு வாசிப்பாளராக இருந்தார். காலையில் வேலைக்குச் செல்வதுபோல ஞானியின் வீட்டுக்கு வந்துவிடுபவர், மாலை வரை நாளிதழ்கள், புத்தகங்கள் என்று ஞானி சொல்வதையெல்லாம் வாசிப்பார். ஜோதிமீனா வாசிக்கக் கேட்கும் ஞானி, இடையிடையே தன்னுடைய கருத்துகளை விமர்சனங்களாகச் சொல்ல அதை எழுதவும் செய்வார். ஞானியின் வாசிப்பு வேட்கையை நம்மிடம் அவர் பகிர்ந்துகொள்கிறார்.

கோவை ஞானியிடம் நீங்கள் எப்போது உதவியாளராகச் சேர்ந்தீர்கள்?


2007-ல் ஐயாவுக்குப் படிப்பதற்கு உதவியாளராக வந்தேன். என் கணவர்தான் ஐயாவிடம் சென்றால் நிறைய கற்றுக்கொள்ள முடியும்; நீயும் உன் படிப்பைத் தொடரலாம் என்று அனுப்பிவைத்தார். அப்போது எனக்கு இரண்டாவது குழந்தை பிறந்திருந்த சமயம். என்றாலும், கைக்குழந்தையை வீட்டில் விட்டுவிட்டு ஐயாவுக்குப் படிக்க வந்தேன். இன்று முனைவர் பட்டம் பெற்று, கடந்த ஆண்டு இறுதியில் பணிக்கும் சென்றுவிட்டேன் என்றால், அதற்கு ஐயாதான் முழுமுதல் காரணம். 

சிட்னி ஸ்ரீ துர்க்கா திருக்கோவிலில் வரலட்சுமி விரதம் 31/07/2020



விரதம் இருக்கும் முறை:
ஆடி அல்லது ஆவணி மாத பவுர்ணமிக்கு முன்னதாக வரும் வெள்ளிக் கிழமை அன்று, வரலட்சுமி விரதத்தை மேற்கொள்ள வேண்டும்.  எதிர்வரும் வெள்ளிக்கிழமை 31/07/2020 ம் திகதி சிட்னி ஸ்ரீ துர்க்கா திருக்கோவிலில் வரலட்சுமி விரதம் நடைபெறுகின்றது. 


வரலட்சுமி விரதத்தின் மகத்துவம்!
பெண்கள் வரலட்சுமி விரதம் இருப்பதால், அஷ்ட லட்சுமிகளும் மகிழ்வதாக ஐதீகம். இதனால், திருமணமான பெண்களின் மாங்கல்ய பாக்கியம் நிலைக்கும். செல்வம் சேரும். கன்னிப்பெண்களுக்கு திருமணம் கைகூடும். குழந்தைகளுக்கு கல்வி ஞானம் கிட்டும். அம்பிகையின் அருளால் விரும்பிய நலன்கள் வாழ்வில் கிடைக்கப்பெறும்.


பிரபல இந்தி நடிகர் அமிதாப் பச்சனுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு

.


பிரபல இந்தி நடிகர் அமிதாப் பச்சனுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதையடுத்து, மும்பையில் உள்ள நானாவதி மருத்துவமனையில் கடந்த 11-ம் தேதி அனுமதிக்கப்பட்டார். அவரைத் தொடர்ந்து, அவரது மகன் அபிஷேக் பச்சன், மருமகள் ஐஸ்வர்யா ராய், பேத்தி ஆராத்யா ஆகியோருக்கும் வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அவர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், அமிதாப் பச்சன் தனது ரசிகர்களுக்காக ட்விட்டரில் கவிதை வடிவில் ஒரு பதிவை நேற்று வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது: விதி மிகவும் சக்தி வாய்ந்த ஒன்று. எனக்கு கரோனா தொற்று ஏற்பட்டு சிறைபடுத்தப்பட்டிருப்பதும் விதியால் நிகழ்ந்ததுதான். எந்த வகையான சிறைபடுத்தலுக்கும் நிச்சயம் ஒரு முடிவு உண்டு. அந்த வகையில், எனது இந்த சிறைவாசத்துக்கும் ஒரு முடிவு இருக்கும்.
அனைவருக்குமே தனிப்பட்ட முறையில் ஒரு எதிர்பார்ப்பும், நம்பிக்கையும் இருக்கும். ஆனால், நிர்ணயிக்கப்பட்ட விதியை வெற்றிக் கொள்பவர் யாரும் கிடையாது. மக்களில் பெரும்பாலானோர் தங்கள் விதியை ‘நான்’ என்ற அகந்தையால் வெற்றி கொள்ள நினைக்கின்றனர். ஆனால், அவர்களின் எண்ணம் ஈடேறுவதில்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.