இரக்கங்கொள்வீர்! – அன்பு ஜெயா, சிட்னி (பா வகை: ஆசிரியத் துறை)

 

இரக்கம் என்பதே எல்லோர் மனத்திலும்

பரந்தே இருந்தால் பாரினில் என்றுமே

இரந்து வாழ்பவர் இருப்பரோ

இரக்கமே கொள்வீர் இன்னலை நீக்கவே!

 

துன்பம் எவரையும் துவளச் செய்தால்

அன்புடன் அவர்க்கும் அளித்திடே உதவி

என்றும் வாழ்வோர் எல்லாம்

இன்பமாய் இருந்திட ஏற்றவை செய்திடு!

 

இருப்பதில் பகுதியை இரப்போர்க் கீதல்

இருத்தும் உன்னை இறையின் அருகில்

பெருகிடும் நல்வினைப் பேறுமே

நெருங்கிடும் அமைதியே நெஞ்சினில் நிறுத்திடு!

No comments: