ஆசைகள் என்பது எல்லா மனிதர்களுக்கும் பொதுவானவை. ஒருவர் இளைஞராக இருந்தாலும் முதியவராக இருந்தாலும், ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும், சாதாரண மனிதராக இருந்தாலும் முனிவராக இருந்தாலும் ஆசைகள் அனைவரிடமும் காணப்படுகின்றன. ஆனால், நல்ல ஆசைகளை வளர்த்துக் கொள்வது மிகவும் முக்கியமானது. உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்ற விருப்பம், ஒழுக்கமுள்ள வாழ்க்கையை வாழ வேண்டும் என்ற எண்ணம், சிறந்த மாணவனாக உருவாக வேண்டும் என்ற நோக்கம், அல்லது தெய்வீகப் பாதையில் நடக்க வேண்டும் என்ற தாபம் போன்றவை உயர்ந்த ஆசைகளாகும்.
மனிதன் உலகத்தில் வாழ வேண்டியிருப்பதால் அவனுக்கு ஆசைகள் இருப்பது இயல்பானதே. ஆனால் அவற்றிற்கு ஒரு வரம்பு இருக்க வேண்டும். கலியுகத்தின் தாக்கத்தால் மனிதனின் ஆசைகள் எல்லையை மீறி வளர்ந்துவிட்டன. அதன் விளைவாக அவன் மன அமைதியை இழந்து, எப்போதும் பதற்றத்திலும் அமைதியின்மையிலும் வாழ்கிறான்.
மனிதனின் அளவற்ற ஆசைகள் அவனை கட்டிப் போடும் சங்கிலிகளைப் போன்றவை. ஆசைகளால் கட்டுண்டவன் தனது சுதந்திரத்தையே இழக்கிறான். மிருகங்களுக்கும் ஆசைகள் உள்ளன. ஆனால் அவை மனிதனுடைய ஆசைகளைப் போல அளவில்லாதவை அல்ல. மிருகங்களுக்கு ஒரு காரணமும் ஒரு காலமும் உண்டு; ஆனால் மனிதனுக்கு காரணமும் இல்லை, காலமும் இல்லை. இதுவே இன்று மனிதன் பல துன்பங்களையும் பிரச்சினைகளையும் எதிர்கொள்வதற்கான முக்கிய காரணமாகும்.
மனிதனுக்கு உணவு, உடை, இருப்பிடம் ஆகியவற்றில் குறைபாடு இல்லை. அப்படியிருக்கையில், அவன் ஏன் அமைதியின்றி தவிக்கிறான்? அதற்குக் காரணம் அவனுடைய அளவுக்கு மீறிய ஆசைகளே. எனவே, மனிதன் தனது ஆசைகளுக்கு ஒரு வரம்பை விதிக்க வேண்டும்.
“குறைந்த சுமை அதிக சுகம் தரும்” என்பார்கள். வாழ்க்கை என்பது ஒரு நீண்ட பயணம். அந்த நீண்ட வாழ்க்கைப் பயணத்தில் தேவையற்ற ஆசைகள் என்ற அதிக சுமைகளை சுமந்து செல்லக்கூடாது. வேதாந்த மொழியில் இதுவே “வைராக்யம்” அல்லது துறவு என்று அழைக்கப்படுகிறது.
No comments:
Post a Comment