“ சிங்களத்தீவினுக்கோர்
பாலம் அமைப்போம் “ என்று மகாகவி
பாரதியார், சொன்னாலும் சொன்னார் !
இப்படிச்சொல்லிவிட்டதால், அதனைச் சரியாக புரிந்துகொள்ளாமல்,
இன்றும் எமது இலக்கிய உலகிலும், பொதுவெளியிலும் சர்ச்சைகள் தொடருகின்றன.
1983 ஆம் ஆண்டு இலங்கையில் கலவரம் வெடித்தபின்னர்,
தமிழ்நாட்டிலிருந்த
எனது தந்தை வழி உறவினர்கள், எமது குடும்பத்தினரை அங்கே வந்துவிடுமாறு அழைத்தனர்.
எனது தந்தையாரும் அந்தக்
கலவர அதிர்ச்சியினால், அந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம்
மறைந்துவிட்டார். தந்தையாருக்கு தமிழ்நாடு
பாளையங்கோட்டையில் ஒரு பூர்வீக வீடும் இருந்தது.
தந்தையார் லெட்சுமணன்,
1940 ஆண்டு காலப்பகுதியில், தனது நண்பர்கள் சிலருடன் படகேறி வந்து புத்தளத்திற்கு அருகில் கற்பிட்டி கடல்
ஏரியில் ஒதுங்கியவர். அதன்பின்னர் நீர்கொழும்பில்
வசித்த எனது அம்மாவை திருமணம்செய்து, இலங்கையிலேயே
நிரந்தரமாகிவிட்டவர்.
தந்தையாரின் உறவினர்கள்
அழைத்தமையால், முதல் தடவையாக 1984 ஆம் ஆண்டு நான் தமிழகம் சென்றேன். சென்னை பொது மருத்துவமனையில் ( General Hospital - G H ) எழுதுவினைஞராக எனது தந்தையாரின் அண்ணன் மகன் பணியாற்றிக்கொண்டிருந்தார்.
எனக்கும் அண்ணன் முறையான
அவரது சென்னை வீட்டுக்குச்சென்றேன். அவரின் மகன் சென்னை பல்கலைக்கழகத்தில் அப்போது
படித்துக்கொண்டிருந்தார்.
அவர் என்னிடம், “ உங்கள் அம்மா தமிழ் பேசுவார்களா..? “ எனக்கேட்டதும், எனக்கு தூக்கிவாரிப்போட்டது.
“ ஏன்…. தம்பி அப்படி கேட்கிறீர்கள்..? “ என்று நிதானமாகக் கேட்டேன்.
“ உங்கள்
அப்பா, தமிழ்நாட்டிலிருந்து அங்கே வந்தவர். அதனால், நீங்கள் தமிழ் பேசுகிறீர்கள். ஆனால்,
உங்கள் அம்மா, ஶ்ரீலங்காதானே…!? அவர் சிங்களப்பெண்ணாகத்தானே
இருக்கவேண்டும். அதனால்தான் கேட்டேன். “ என்றார்.
எனக்கு சிரிப்புத்தான்
வந்தது. நான் ஏதோ அவரை தவறாக கணித்துவிட்டேன் எனக்கருதிக்கொண்டு, “ பாரதியாரும்
சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம் “ என்றுதானே
சொல்லியிருக்கிறார். “ என்று தனது கேள்விக்கு
அவர் நியாயமும் கற்பித்தார்.