‘பாடும்மீன்‘ என்ற சொற்பதம் ஓர் அடையாளம். தண்ணீரில் மீன் அழுதால், அதன் கண்ணீரை யார் அறிவார்? எனக்கேட்பார்கள்! அதுபோன்று மீன்பாடுமா..? எனவும் கேட்பார்கள்!
மட்டக்களப்பு கல்லடி பாலத்திலிருந்து
முழுமதி நாட்களில் செவிமடுத்தால், கீழே
ஒடும் வாவியிலிருந்து எழும் ஓசையை கேட்கமுடியும். அதனை ஒலிப்பதிவுசெய்து இணையத்தில்
பதிவேற்றியுள்ளனர்.
அருட்தந்தை லோங் அடிகளார் அந்த ஒலியை பதிவுசெய்து
இலங்கை வானொலியில் ஒலிபரப்பினார்.
பாடும்மீன்
என்ற பெயரில் இதழ்கள், விளையாட்டுக்கழகங்கள், சமூக அமைப்புகள் இருக்கும் அதேசமயம்,
அந்தப்பெயரையே முதல் எழுத்துக்களாக்கி
இயங்கிவருபவர்தான் ' பாடும் மீன்' சு. ஶ்ரீகந்தராசா.
1991 ஆம் ஆண்டு
ஒருநாள் எனது மெல்பன் வீட்டுக்கதவு தட்டப்பட்டது. கதவைத்திறந்தேன்.
நண்பர் தமிழரசன், தன்னோடு அழைத்து வந்திருந்தவரை எனக்கு
அறிமுகப்படுத்தினார். “ இவர்தான் பாடும் மீன் ஶ்ரீகந்தராசா “ என்றார்.
முன்னர் கேள்விப்பட்ட பெயராக இருந்தது. அன்றைய
கலந்துரையாடலில் இவரிடம் உள்ளார்ந்த கலை, இலக்கிய ஆற்றல் நிரம்பியிருப்பதை
அறிந்துகொள்ள முடிந்தது.
அக்காலப்பகுதியில் நாம் நடத்திய தமிழர் ஒன்றியத்தின்
முத்தமிழ்விழாவிற்காக நாவன்மைப்போட்டிகளை நடத்தினோம்.
அதற்கு நடுவராக வருகை தந்து போட்டிகளில்
பங்குபற்றுபவர்களை தெரிவுசெய்து
தரமுடியுமா..? எனக்கேட்டேன். பாடும் மீன்
ஶ்ரீகந்தராசா சம்மதித்தார். போட்டி முடிந்ததும், நாவன்மைப்போட்டிகளுக்கு
தயாராவதற்கு முன்னர் எத்தகைய பயிற்சிகளை மேற்கொள்ளவேண்டும் எனவும் ஆலோசனைகளை
விரிவுரையாகவே வழங்கினார்.
யாழ்பாணத்திலிருந்து
கடந்த இரண்டுவருடங்களுக்கும் மேலாக வெளிவந்துகொண்டிருக்கும் தீம்பூனல் வார இதழில் தொடர்ந்தும் குறள் இன்பம் பற்றி
எழுதிக்கொண்டிருக்கும் படைப்பாளி பாடும் மீன்
ஶ்ரீகந்தராசா அவர்களுக்கு இம்மாதம் 01 ஆம் திகதி 70 ஆவது பிறந்த
தினம். இந்தத்தினத்தை அவரது
குடும்பத்தினர் மெல்பனில், கடந்த 15 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கலை, இலக்கிய அன்பர்கள்
மற்றும் குடும்ப நண்பர்கள் புடைசூழ
சிறப்பாக கொண்டாடினர். பாடும் மீன் ஶ்ரீகந்தராசா அவர்களை வாழ்த்திக்கொண்டே, இந்தப்பத்தியை
தொடருகின்றேன்.
பாடசாலைப்பருவத்திலேயே இலக்கியப்பணியை ஆரம்பித்தவர். அரைநூற்றாண்டு காலமாக எழுத்தூழியத்தில்
ஈடுபட்டுவருபவர்.
களுவாஞ்சிக்குடியில் சுப்பையாபிள்ளை - சின்னம்மா தம்பதியரின் ஏகபுத்திரனான
ஶ்ரீகந்தராசா, தனது கல்வியை
பட்டிருப்பு மத்திய மகாவித்தியாலயம், மட்டக்களப்பு இந்துக்கல்லூரி ஆகியவற்றில்
தொடர்ந்த பின்னர், கொழும்பு
பல்கலைக்கழகத்திலும் அதன்பிறகு இலங்கை சட்டக்கல்லூரியிலும் இணைந்து
சட்டத்தரணியானவர்.
இவர் கற்ற
கல்லூரியில் வெளியான உயிர்ப்பு என்ற
கையெழுத்து இதழின் ஆசிரியராகவிருந்தபோது இவரது வயது 14 என்பது
வியப்பானது!
சிறுவயதுமுதலே பேச்சாற்றல், நடிப்பாற்றல்,
எழுத்தாற்றல், முதலான ஆளுமைப்பண்புகளுடன் வளர்ந்திருக்கும் பாடும்மீன்
ஶ்ரீகந்தராசாவுக்கு களம் வழங்கி எழுத்தாளன் என்ற அடையாளத்தை உருவாக்கியது
சிந்தாமணி வார இதழ்.
பத்திரிகை உலக ஜாம்பவான் எஸ்.டி. சிவநாயகம்
பணியாற்றிய பத்திரிகைகள்தான் தினபதியும் சிந்தாமணியும்.
கிழக்கிலங்கையிலிருந்து எழுதத்தொடங்கிய ஶ்ரீகந்தராசாவுக்கு தென்னிலங்கையிலும் எழுத்துப்பணியை தொடருவதற்கு களம் அமைத்துக்கொடுத்தது சிந்தாமணி. அத்துடன், தந்தை செல்வநாயகம் நடத்திய சுதந்திரன் பத்திரிகையிலும் ஊடகவியலாளராக பணியாற்றியிருக்கிறார்.

.jpg)






.png)
.png)
.png)
.jpg)
.jpg)
.png)
.png)

.jpg)
.png)
.jpg)
.jpg)
.png)