தனாசிவம் குருக்கள், சிட்னி
1 - வீட்டில் விளக்கேற்றும் போது
சுவாமி படங்களுக்கு பூ கட்டாயம்
போட வேண்டுமா?
காலையில் விளக்கேற்றி பூ சாத்தி வழிபடவேண்டும். மாலையில் பூ கட்டாயமில்லை.
2 - செவ்வாய், வெள்ளிக்கிழமையில் வீட்டில் ஒட்டடை அடிக்கக் கூடாதா ஏன்?
செவ்வாயும், வெள்ளியும் பொருள் வாங்கிச் சேர்த்தால் வளரும். அதனால், இவ்விரு நாட்களிலும் வீட்டைத் துடைப்பதில்லை. முதல்நாளே ஒட்டடை அடித்து சுத்தப்படுத்தி விடுங்கள்.
3 - கண்ணை மூடிக் கொண்டு
கடவுளை வழிபடக்கூடாது என்கிறார்களே! உண்மையா?
கடவுளின் திருவுருவம் கண் முன்னே இருக்கும்போது கண்ணாரக் கண்டு வழிபட வேண்டும். திருவுருவம் இல்லாத இடத்தில் வழிபட வேண்டிய காலத்தில், கண்ணை மூடி மனதில் கடவுளின் உருவத்தை நிலை நிறுத்தி வழிபாடு செய்யலாம்.
4 - திருமணஞ்சேரியில் வேண்டிக்கொண்ட பிரார்த்தனை
மாலை தொலைந்துவிட்டது. மீண்டும் மாலை செலுத்த விரும்புகிறேன். பரிகாரம் என்ன?
அறியாமல் செய்த தவறு தானே! இதற்காகக் குழம்பிக் கொள்ள வேண்டாம். மீண்டும் திருமணஞ்சேரி சென்று புதுமாலை வாங்கி சேர்த்து விடுங்கள். தவறைப் பொறுக்குமாறு கல்யாணசுந்தர சுவாமியிடம் வேண்டிக் கொள்ளுங்கள்.
5 - சஞ்சீவிமலையைத் தூக்கி வரும் அனுமனை வீட்டில் வைத்து வழிபடக்கூடாது என்கிறார்களே, ஏன்?
சஞ்சீவி என்பது உயிர் காக்கும் மூலிகை. இந்த அனுமனை வழிபட்டால் கவலை நம்மை தீண்டாது. இவரை வழிபட நோயில்லாத நல்வாழ்வு உண்டாகும்.
6 - கனவில் பாம்பு அடிக்கடி
வருகிறது. அதைத் தவிர்க்க
ஏதாவது பரிகாரம் உண்டா?
பொதுவாக கனவில் பாம்பு வந்தால் பணம் வரும் என்பார்கள். மற்றபடி பயப்பட ஏதுமில்லை. முருகனுக்கு அர்ச்சனை செய்து பயத்தைப் போக்கிக் கொள்ளுங்கள்.
7 - பூஜை, விரதம்
போன்றவற்றை பெண்கள் மட்டுமே
கடை பிடிக்க வேண்டுமா, ஆண்கள் கடைபிடிக்கக் கூடாதா?
இவற்றில் ஆண், பெண் பாகுபாடு கிடையாது. வீடு, குழந்தைகள் நலன் விஷயங்களில் பெண்களே அதிகம் அக்கறை கொண்டவர்களாக இருப்பதால் பூஜை, விரதங்களில் ஈடுபாடு காட்டுகிறார்கள். மற்றபடி ஆண்கள் பூஜை, விரதம் போன்றவற்றைச் செய்யாமல் இல்லை.