முத்தமிழில் முகிழ்த்தார் வித்தகராய் எழுந்தார் !

 


















மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் .... அவுஸ்திரேலியா 





ஈழத்தின் கிழக்கில் எழுந்த தொருமுத்து 
ஆழவே தமிழில் மூழ்கிய நல்முத்து
வாழ்வையே பணியாய் ஆக்கியே நின்று
வரமெனவே மாநிலத்தில் வந்தந்த முத்து 

தந்தைதாய் வைத்த பெயர் மயில்வாகனம் 
தவவாழ்வைத் தேர்ந்ததனால் பெயர் மாறினார்
வெள்ளை நிறமல்லிகையாய் இறை நாடினார்
விபுலானந்த அடிகளாய் நிலை மாறினார் 

பட்டங்கள் பெற்றார் பதவிகள் பெற்றார்
பற்றற்ற வாழ்வையே பற்றியே நின்றார்
பற்றற்று நின்றாலும் பசுந்தமிழைப் பற்றினார்
பாடினார் பேசினார் பலநூல்கள் எழுதினார்

முத்தமிழ் வித்தகராய் முகிழ்த்தவரும் எழுந்தார்
முத்தமிழை வாழ்விலவர் ஏந்தியே வாழ்ந்தார்
பண்தொட்டுப் பலவாய்வு செய்துமவர் நின்றார்
பலபேரும் வியக்கவே யாழ்நூலைத் தந்தார் 

அடிகளார் கவிதைகள் அனைத்துமே சிறப்பு
வெள்ளை நிறமல்லிகையே மேலதிகச் சிறப்பு
அடிகளார் அடையாளம் இக்கவிதை என்றால்
அதைமறுத்து எவருமே உரைக்க வரமாட்டார் 

ஆசானாய் இருந்தார் அதிபராய் ஆனார்
அதியுயர்வாய் பல்கலைக்கழகப் பேராசான் ஆகினார்
முத்தமிழில் முகிழ்த்தார் வித்தகராய் எழுந்தார்
அர்த்தமுடன் வாழ்ந்தார் அவரெங்கள் சொத்தே 

கல்வியைக் கொடுப்பதற்கும் கடும்பாடு பட்டார்
பலகல்விக் கூடங்களை அமைத்தவரும் நின்றார்
அடிகளார் அரும்பணியால் அனைவருமே கற்றார்
அறமோடு ஆசாரம் அங்கவரும் கொடுத்தார் 

பண்போடு கல்வி பக்தியுடன் கல்வி
பாமரப் பிள்ளைகளும் படிப்பதற்கு வசதி
இத்தனையும் இணைய கல்வியினைக் கொடுத்தார்
முத்தமிழின் வித்தகர் சுவாமி விபுலானந்தர்  ! 





No comments: