மகாகவி சொன்னதின் பொருள் விளங்காது இன்றும் தவறாகப் பேசுகிறார்களே!

 














பாரதியார் பகர்ந்திட்ட கூற்றைத் தப்பாய்ப்

    பறைசாற்றும்  பாமரர்காள் சற்றே கேட்பீர்!

தாரணியிற் சிறந்தமொழி “தமிழும் மெல்லத்

    தரங்குனறிச்; சாகும்”என்றவர் சொல்லவே இல்லை!

யாரெவரோ மதியிழந்து உரைத்தல் கேட்டு

    “யாரெந்தப் பேதையிதைக் கூறிச் சென்றான்?

வேர்வுதரும் இந்தவசை எனக்(கு) எட்டவோ”  வென

    வெகுண்டெழுந்து பாரதியும் மேலுஞ் சொன்னான்!

 

 எட்டுத்திக் குகளெல்லாம் சென்று  கலையில்;

    இணையிலாச் செல்வங்கள் யாவுங் கொணர்ந்து

கெட்;டித்தன மாகத்தேன் தமிழின் வளத்தைச்

    செழுமைசெய் வீரென்று பாரதி அன்றிதை

மட்டுந்தான் பாவினிலோர்  செய்தியாய்ச் சொன்னான்!

    மாறாகத் தமிழ்இனிமேற் சாவுமென் றெதுவும்

மட்டியைப்போற் சொல்லவில்லை மறந்தும் நீவிர்

    மாறாகத் தவறான விளக்கம் கொளாதீர்!

  

பஞ்சபூதச் செயல்நுட்பங் கூறிட இன்று

    பாவிக்கும் ஆங்கிலச்சொல் பலதிற்குத் தமிழில்

விஞ்சும்நற்; சொல்லாக்கம் குறைவே என்ற

    வெற்றிடம்பெருங் கவலைதனைத் தருவ துண்மை!

பஞ்சமொன்றுந் தமிழுக்கு என்றும் இல்லை!

    பரந்தெங்கும் சிதறிவிட்ட கலைச்செல் வங்களைச்

செஞ்சோற்றுக்; கடனாக நினைந்து நீவிர்

    சேர்த்திடுவீர் என்றன்றோ பாரதி சொன்னான்!

  

விஞ்ஞான வளர்ச்சிக்கு ஈடு கொடுக்க

    வேண்டுஞ்சொல் ஆக்கங்கள் தமிழில் வேண்டும்!

அஞ்ஞான இருள்அகல வேண்டும்! பழைய

    அரும்பெருந் தமிழ்ச்சொற்கள் பாவனை வேண்டும்!

மெய்ஞ்ஞானம் தழைத்தோங்கிப் பாரில் எங்கும்;

    மேன்மைமிகு சமரசசன் மார்க்கந் தழைத்து

எஞ்ஞான்றும் கல்லால்போல் நிலைத்திட வேண்டும்!

    எல்லோரும் வாழ்வாங்கு வாழ்ந்திடல் வேண்டும்!

  

செந்தமிழைக் கலப்பின்றிக் “காப்போர்;” உலகில்

    திருவருளால் உயிர்பெற்று வாழும் வரையும்

அந்தமிலெம் தேன்தமிழுக்(கு) அழிவே இல்லை!

    ஆங்கிலக்கலப் புடனேயெழும் இலக்கிய மெல்லாம்

வெந்தணலில் விழுந்திட்ட தூறல் போல

    வெகுவிரைவாய் இருந்தவிடம் தெரியாது அழியும்!

செந்தமிழைச் சிதைப்போருக்(கு) அறம்பா டியேநாம்

    சீரிளமைத் தமிழணங்கின் சீர்போற் றுவோமே!

 

 












பல்மருத்துவ கலாநிதி பாரதி இளமுருகனார்.


No comments: