கல்லும் தெரியாது முள்ளுந் தெரியாது
காலிலே செருப்புமின்றி எப்படித்தான் திரிந்தோமோ
குழங்கண்ட இடமெல்லாம் குதித்துமே நீந்திடுவோம்
நேரங்கெட்ட நேரத்தில் நிறையவே சாப்பிடுவோம்
ஊருறங்கும் வேளை ஊர்சுற்றித் திரிவோம்
ஒழுங்கையெலாம் நாங்கள் ஓடியே திரிவோம்
காலோய்ந்த பின்னால் வீடுவந்து படுப்போம்
கட்டிலும் இல்லை மெத்தையும் இல்லை
கட்டாந் தரையே எங்கள் கட்டிலாகும்
எறும்பு கடிக்கும் நுளம்பும் கடிக்கும்
அவைப்பாட்டில் கடித்து அவையலுத்துப் போகும்
காலையிலே அம்மா காளியாகி நிற்பா
கோபமுடன் குடத்து நீரைக்கொட்டி விடிவா
துடித்துப் பதைத்து அம்மாவைப் பார்ப்போம்
மாகாளி வடிவவமாய் மாறிநிற்பா அம்மா
பழையபடம் புதுப்படம் எதுவும் விடமாட்டோம்
பள்ளிக்குப் போகாமல் படம்பார்க்கப் போவோம்
அடுத்தநாள் பள்ளிசென்றால் ஆசிரியர் கேட்பார்
அப்பாவின் அம்மா செத்ததாய் சொல்லுவோம்
ஆசிரியர் விடமாட்டார் வீடுவந்து நிற்பார்
அப்பாவின் அம்மா வாசலிலே இருப்பார்
ஆசிரியர் கோபமாய் அனைத்துமே சொல்வார்
அப்பாவோ அசுரனாய் ஆகியே விடுவார்
பொய்சொல்லி பொய்சொல்லி போக்கினோம் பொழுதை
தப்பிதமே என்றுநாம் எண்ணியதே இல்லை
இப்போது நினைத்தாலும் எப்படித்தான் செய்தோம்
எனும்நினைப்பே மனமதிலே எழுந்து வருகிறதே
இப்போது நினைத்தாலும் அக்காலம் வருமா
அக்கால நினைவுகள் அடிமனத்தில் இருக்கிறது
காரிருக்கு வீடிருக்கு கலகலப்பும் இருக்கு
என்றாலும் அக்காலம் இனிப்பாக இருக்கு !
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
No comments:
Post a Comment