உலகச் செய்திகள்

போர்நிறுத்த உடன்பாட்டை மீறி லெபனான் தலைநகர் பெய்ரூட் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்

ஹோர்முஸ் நீரிணையை உடனடியாகத் திறக்க வேண்டும்: ஈரான் வெளிவிவகார அமைச்சரிடம் சீனா வலியுறுத்தல்!

உலக வரைபடத்தில் இருந்து ஈரான் அழிக்கப்படும் - டிரம்ப்

தமிழகத்தில் ஆட்சி அமைக்கிறது டிவிகே: விஜய் தலைமையில் புதிய அரசு - காங்கிரஸ், விசிக ஆதரவு!


போர்நிறுத்த உடன்பாட்டை மீறி லெபனான் தலைநகர் பெய்ரூட் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்

Published By: Digital Desk 3

07 May, 2026 | 10:37 AM

இஸ்ரேல் மற்றும் ஹெஸ்புல்லா அமைப்பிற்கு இடையே கடந்த மாதம் போர்நிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்டதைத் தொடர்ந்து, முதன்முறையாக லெபனான் தலைநகர் பெய்ரூட்டின் தெற்குப் புறநகர்ப் பகுதியில் இஸ்ரேல் புதன்கிழமை (06) வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது.

ஹெஸ்ஸ்புல்லா அமைப்பின் அதிமுக்கியப் பிரிவான 'ரத்வான்' படையின் தளபதி ஒருவரைக் குறிவைத்தே இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் ஆகியோர் இணைந்து வெளியிட்ட கூட்டு அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

இந்தத் தாக்குதலில் அத்தளபதி கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ள போதிலும், இஸ்ரேலிய இராணுவமோ அல்லது ஹெஸ்புல்லா அமைப்போ இதனை இன்னும் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையேயான மோதல்களை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அமைதிப் பேச்சுவார்த்தைகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ள சூழலில், பெய்ரூட் மீது இஸ்ரேல் நடத்தியுள்ள இந்தத் தாக்குதல் ஒட்டுமொத்த போர்நிறுத்த ஒப்பந்தத்தையும் முறிக்கும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது.

லெபனானின் தெற்குப் பகுதியில் உள்ள லிடானி ஆற்றிற்கு தெற்கே இஸ்ரேலியப் படைகள் இன்னும் நிலைநிறுத்தப்பட்டுள்ளதுடன், அங்குக் கடுமையான தாக்குதல்களும் தொடர்கின்றன. இதற்குப் பதிலடியாக ஹிஸ்புல்லா அமைப்பும் இஸ்ரேலிய இராணுவ நிலைகளைக் குறிவைத்து ஏவுகணை மற்றும் ஆயுதமேந்திய ட்ரோன் தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது.

வொஷிங்டனில் இரு நாட்டுத் தூதரக அதிகாரிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தைகள் தொடர்கின்றன. எனினும், உயர்மட்டத் தலைவர்களின் சந்திப்பு குறித்துப் பேசுவது தற்போதைக்கு முன்கூட்டிய ஒன்றாகும் என லெபனான் பிரதமர் நவாப் சலாம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து லெபனான் பிரதமர் சலாம், 

"நாங்கள் இஸ்ரேலுடன் உறவைச் சீராக்க விரும்பவில்லை, மாறாக அமைதியையே விரும்புகிறோம். எங்கள் எல்லையிலிருந்து இஸ்ரேலியப் படைகள் வெளியேறுவதற்கான கால அட்டவணையை வழங்குவதே எங்களது குறைந்தபட்ச கோரிக்கையாகும்." எனத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு மற்றும் லெபனான் ஜனாதிபதி ஜோசப் அவூன் ஆகியோரை நேரில் சந்தித்துப் பேச அழைப்பு விடுத்துள்ள போதிலும், முறையான பாதுகாப்பு உடன்பாடும் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களும் நிறுத்தப்பட்ட பின்னரே அது சாத்தியம் என லெபனான் தரப்பு தெரிவித்துள்ளது.

லெபனானின் தெற்குப் பகுதியான செலயாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் இரண்டு பெண்கள் உட்பட நால்வர் கொல்லப்பட்டுள்ளதாக லெபனான் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த மார்ச் 2-ஆம் திகதி போர் ஆரம்பமானதில்  இருந்து லெபனானில் 2,700-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.   நன்றி வீரகேசரி 





ஹோர்முஸ் நீரிணையை உடனடியாகத் திறக்க வேண்டும்: ஈரான் வெளிவிவகார அமைச்சரிடம் சீனா வலியுறுத்தல்!

Published By: Digital Desk 3

06 May, 2026 | 05:41 PM

(இணையத்தள சர்வதேச செய்திப் பிரிவு)

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான போருக்குப் பின்னர் முதன்முறையாகச் சீனாவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள ஈரான் வெளிவிவகார  அமைச்சர் அப்பாஸ் அராக்சியைச் சந்தித்துப் பேசிய சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீ உலகளாவிய எண்ணெய் போக்குவரத்துக்கு முக்கியப் பாதையாக விளங்கும் 'ஹோர்முஸ் நீரிணையை' உடனடியாகத் திறக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.

புதன்கிழமை ( 06) பீஜிங்கில் நடைபெற்ற இருதரப்பு அவசரப் பேச்சுவார்த்தையின் போதே இந்த விவகாரம் முக்கியமாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

மேற்காசியாவில் ஏற்பட்டுள்ள பதற்றத்தைத் தணிக்கச் சீனா உதவத் தயாராக இருப்பதாகத் தெரிவித்த சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீ, "மத்திய கிழக்கில் நிலையானதொரு போர் நிறுத்தத்தை ஏற்படுத்துவதே தற்போதைய அவசர முன்னுரிமையாகும். மீண்டும் மோதல்கள் வெடிப்பதை எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இதனால், இருதரப்பும் தொடர்ந்து பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முயற்சிக்க வேண்டும்," எனக் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய இரு நாடுகளும் விதித்துள்ள தடைகள் மற்றும் கடற்படை முற்றுகைகள் காரணமாக, உலகின் பெரும்பாலான மசகு எண்ணெய் கொண்டு செல்லப்படும் ஹோர்முஸ் நீரிணை தற்போது முழுமையாக முடக்கப்பட்டுள்ளது.

இது குறித்து  சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீ,

"ஹோர்முஸ் நீரிணையில் பாதுகாப்பான மற்றும் இயல்பான கப்பல் போக்குவரத்தை மீண்டும் தொடங்குவதில் சர்வதேச சமூகம் பெரும் அக்கறை கொண்டுள்ளது. எனவே, சர்வதேச சமூகத்தின் இந்த வலுவான கோரிக்கைக்குச் சம்பந்தப்பட்ட தரப்பினர் (ஈரான் மற்றும் அமெரிக்கா) உடனடியாகப் பதிலளிக்க வேண்டும் எனச் சீனா நம்புகிறது." எனத் தெரிவித்துள்ளார்.

சீனா தனது மசகு எண்ணெய் தேவையில் சுமார் 12 சதவீதத்தை (தினமும் 1.38 மில்லியன் பேரல்கள்) ஈரானிடமிருந்தே இறக்குமதி செய்கிறது என்பதால், இந்த நீரிணை மூடப்பட்டிருப்பது சீனப் பொருளாதாரத்திற்கும் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது.

ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்காது என்ற தங்களின் கொள்கைப்பாட்டில் உறுதியாக இருப்பதற்குச் சீனா தனது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்வதாகச் சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதேவேளை, சீனாவுடனான ஈரானின் உறவு எதிர்காலத்தில் மேலும் வலுவடையும் என ஈரான் அமைச்சர் அராக்சி உறுதியளித்துள்ளார்.

அடுத்த வாரம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் ஆகியோருக்கு இடையே பீஜிங்கில் வரலாற்றுச் சிறப்புமிக்க உச்சிமாநாடு நடைபெறவுள்ளது. இதில் ஹோர்முஸ் நீரிணையைத் திறப்பது மற்றும் ஈரான் போர் விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் விரிவாக ஆராயவுள்ள நிலையில், அதற்கு முன்னதாக ஈரான் அமைச்சருடன் சீனா நடத்தியுள்ள இந்தப் பேச்சுவார்த்தை சர்வதேச அளவில் உற்றுநோக்கப்படுகிறது.   நன்றி வீரகேசரி 






உலக வரைபடத்தில் இருந்து ஈரான் அழிக்கப்படும் - டிரம்ப்

Published By: Vishnu

05 May, 2026 | 06:02 AM

ஹோர்முஸ் நீரிணையில் "புராஜெக்ட் ஃப்ரீடம்" (Project Freedom) நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள அமெரிக்கக் கப்பல்களை ஈரான் தாக்கினால், அது "உலக வரைபடத்திலிருந்தே துடைத்தெறியப்படும்" என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஃபாக்ஸ் நியூஸ் தொலைக்காட்சிக்கு அளித்த ஒரு சிறப்பு நேர்காணலில் ஜனாதிபதி இந்த அறிக்கையை வெளியிட்டார்.

அமெரிக்க கடற்படை சொத்துக்கள் மீது ஈரான் நடத்தும் எந்தவொரு தாக்குதலுக்கும் பேரழிவுகரமான பதிலடி கொடுக்கப்படும் என்று ஜனாதிபதி வலியுறுத்தினார்.

தொடர்ந்து வரும் அழுத்தங்களுக்கு மத்தியில், பேச்சுவார்த்தை மேசையில் ஈரானிய ஆட்சி (தெஹ்ரான்) மிகவும் இணக்கமான கொள்கையைக் கடைப்பிடித்து வருவதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியதாகவும் குறித்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.   நன்றி வீரகேசரி 





தமிழகத்தில் ஆட்சி அமைக்கிறது டிவிகே: விஜய் தலைமையில் புதிய அரசு - காங்கிரஸ், விசிக ஆதரவு!

08 May, 2026 | 04:29 PM

தமிழக சட்டமன்றத்தில் நிலவி வந்த அரசியல் இழுபறிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மற்றும் இடதுசாரி கட்சிகளின் ஆதரவுடன் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் பெரும்பான்மையை எட்டியுள்ளது.

234 உறுப்பினர்களைக் கொண்ட தமிழக சட்டமன்றத்தில் ஆட்சி அமைக்க 118 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. தற்போது நிலவரப்படி விஜய்க்கு ஆதரவான பலம் பின்வருமாறு,

தமிழக வெற்றிக் கழகம் (TVK): 107 எம்.எல்.ஏ-க்கள்

காங்கிரஸ்: 05 எம்.எல்.ஏ-க்கள்

விடுதலைச் சிறுத்தைகள் (VCK): 02 எம்.எல்.ஏ-க்கள்

சிபிஐ (CPI): 02 எம்.எல்.ஏ-க்கள்

சிபிஐ(எம்) (CPI-M): 02 எம்.எல்.ஏ-க்கள்

மொத்தம்: 118

தனிப்பெரும் கட்சியாக இருந்தபோதிலும் பெரும்பான்மை இல்லை எனக் கூறி, ஆட்சி அமைக்க விஜய்க்கு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் முன்னதாக அழைப்பு விடுக்க மறுத்திருந்தார். இந்நிலையில், இன்று மாலை 4.30 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க விஜய் நேரம் கோரியுள்ளார்.

இந்தச் சந்திப்பின் போது கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுக் கடிதங்களை அவர் சமர்ப்பித்து, ஆட்சி அமைக்க உரிமை கோருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கிய எதிர்க்கட்சிகளான காங்கிரஸ் மற்றும் விசிக ஆகியவற்றின் இந்தத் திடீர் ஆதரவு, தமிழக அரசியலில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளது. ஆதரவு வழங்கும் கட்சிகள் தங்களது முடிவை முறைப்படி அறிவிக்க இன்று கூட்டுச் செய்தியாளர் சந்திப்பு ஒன்றையும் நடத்தத் திட்டமிட்டுள்ளன.

ஆளுநரின் முரண்பட்ட நிலைப்பாட்டிற்கு மத்தியில், ஒரே நாளில் ஏற்பட்டுள்ள இந்த அரசியல் ஒருங்கிணைப்பு தமிழகத்தில் விஜய் தலைமையிலான புதிய அரசு அமைய வழிவகுத்துள்ளது.   நன்றி வீரகேசரி 



No comments: