இலங்கைச் செய்திகள்

போர் தாக்கம் : உலக உணவு விலைகள் மீண்டும் உச்சம் - ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பு

பாலையடிவட்டை இராணுவ முகாம் விடுவிப்பு ; நேரடியாக சென்று பார்வையிட்டார் சாணக்கியன்.எம்.பி

நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற புனித வியாழன், புனித வெள்ளி விழிபாடுகள்

வடக்கிற்கான புகையிரத சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளது ; யாழ் புகையிரத நிலைய பொறுப்பதிகாரி பிரதீபன்



போர் தாக்கம் : உலக உணவு விலைகள் மீண்டும் உச்சம் - ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பு


Published By: Vishnu

04 Apr, 2026 | 03:43 AM

மத்திய கிழக்கில் தொடரும் போரின் காரணமாக எரிசக்தி மற்றும் எரிபொருள் விலைகள் உயர்ந்ததால், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குப் பிறகு மார்ச் மாதத்தில் உலக உணவு விலைகள் மிக உயர்ந்த அளவை எட்டியுள்ளன.

ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பு (FAO), போர் 40 நாட்களுக்கு மேல் தொடர்ந்தால் மற்றும் எரிபொருள், உரம் போன்ற உள்ளீடுகளின் விலை அதிகமாக இருந்தால், விவசாயிகள் தங்கள் சாகுபடியைக் குறைக்கத் தூண்டப்படலாம் என்று எச்சரித்துள்ளது.

அதன்படி, இது இந்த ஆண்டும் அடுத்த ஆண்டும் உணவு விநியோகத்திலும், பொருட்களின் விலைகளிலும் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பின்படி, பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் உலகளாவிய உணவு விலைக் குறியீடு 2.4% அதிகரித்துள்ளது.

அதன்படி, சர்க்கரை விலைகள் 7.2% மற்றும் சமையல் எண்ணெய் விலைகள் 5.1% அதிகரித்துள்ளன, அதே நேரத்தில் கோதுமை விலைகளும் 4.3% அதிகரித்துள்ளன.

அறுவடை காலம் மற்றும் குறைந்த இறக்குமதி தேவை காரணமாக அரிசி விலை 3.0% குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  நன்றி வீரகேசரி 










பாலையடிவட்டை இராணுவ முகாம் விடுவிப்பு ; நேரடியாக சென்று பார்வையிட்டார் சாணக்கியன்.எம்.பி

Published By: Digital Desk 3

03 Apr, 2026 | 03:53 PM

மட்டக்களப்பு மாவட்டம் போரதீவூபற்று பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பாலையடிவட்டை கிராமத்தில் அமைந்துள்ள பொதுச் சந்தைக் கட்டடத் தொகுதியில் சுமார் 25 வருடங்களுக்குமேலாக இலங்கை இராணுவம் கையகப்படுத்தி முகாமிட்டிருந்துவந்தது.

இந்த பொதுச்சந்தைக் கட்டடத் தொகுதியில் முகாமிட்டிருந்த இராணுவத்தினர் தற்போது அவ்விடத்திலிருந்து வெளியேறி அக்காணியை விடுவித்துள்ளனர். அவ்விடத்தை வியாழக்கிழமை மாலை (02) மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் மற்றும் பிரதேச சபைகளின் தவிசாளர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், அப்பகுதி கிராம மக்கள் என பலரும் நேரடியாகச் சென்று பார்வையிட்டிருந்தனர்.

இந்நிலையில், இவ்விடயம் தொடர்ச்சியாக பாராளுமன்ற


அமர்வுகளிலும், பாதுகாப்பு அமைச்சின் விசேட கூட்டங்களிலும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனின் பெரும் முயற்சியை மேற்கொண்டு வந்திருந்தார். 

இந்த காணி இராணுவத்தினரிடமிருந்து விடுவிக்கப்பட்டதற்கு, பாதுகாப்பு  அமைச்சுக்கும், ஜனாதிபதிக்கும் நன்றிகளை தெரிவிக்கின்றோம், தாமும் தமது பிரதேச சபையினை பொறுப்பேற்று இரண்டாவது சபை அமர்வின்  பிரேரணைகளை ஜனாதிபதிக்கும் பாதுகாப்பு அமைச்சுக்கும் அனுப்பியிரந்தோம் என இதன்போது போரதீவுபற்று பிரதேச சபை தவிசாளர் விமலநாதன் மதிமேனன் தெரிவித்தார்.


இலங்கை தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன்,போரதீவுபற்று பிரதேசசபை தவிசாளர் விமலநாதன் மதிமேனன், மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ், மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள், அப்பகுதி கிராம மக்கள் எனப்பலரும் பிரன்னமாகியிருந்தமை இன்போது பிரசன்னமாகியிருந்தனர்.












நன்றி வீரகேசரி 










நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற புனித வியாழன், புனித வெள்ளி விழிபாடுகள்

03 Apr, 2026 | 12:56 PM

நாடளாவிய ரீதியில் கிருஸ்தவர்கள் புனித வியாழன், புனித வெள்ளி விழிபாடுகளில் ஈடுப்பட்டு வருகின்றனர். இயேசுவின் பாடுகள், மரணம், உயிர்ப்பை நினைவு கூறும் முகாமாக இந்த வழிபாடுகள் இடம்பெற்று வருகின்றன. 

மன்னார் 

மன்னார் தூய செபஸ்தியார் பேராலயத்தில்  வியாழக்கிழமை (02) மாலை பெரிய வியாழன் திருப்பலி கூட்டுத்திருப்பலி யாக ஒப்புக் கொடுக்கப்பட்டது.    

பெரிய வியாழன் திருப்பலி மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை தலைமையில் மன்னார் தூய செபஸ்தியார் பேராலயத்தில் ஆரம்பமானது.

இயேசு கிறிஸ்து தனது சீடர்களுடன் அருந்திய இறுதி இரவு உணவு


மற்றும் அவர் நற்கருணையை ஏற்படுத்தியதை நினைவு கூறும் நாளே பெரிய வியாழன் ஆகும். 

அதை தொடர்ந்து இயேசு அப்பத்தையும் திராட்சை ரசத்தையும் தனது உடல் மற்றும் இரத்தமாகப் பகிர்ந்தளித்ததன் மூலம் நற்கருணை வழிபாட்டையும், குருத்துவத்தையும் நிறுவிய நாளாக இது கருதப்படுகிறது.

திருப்பலிக்கு பிறகு நற்கருணை பீடத்திலிருந்து மாற்றப்பட்டது.இயேசுவின் பாடுகளை நினைவு கூறும் வகையில் அமைதியான முறையில் நற்கருணை ஆராதனை  நடைபெற்றது.


பெரிய வாரத்தின் தொடக்க நாளான  இத் திருப்பலி, புனித வெள்ளியின் துயர நிகழ்வுகளுக்கு முந்தைய முக்கியமான வழிபாடு அமைந்தமை குறிப்பிடத்தக்கது.

மன்னார் தூய செபஸ்தியார் பேராலயத்தில் போலீஸ் மற்றும் இராணுவத்தின் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பு 

உலகவால் கிறிஸ்தவர்களின் புனித வழிபாடுகளில் ஒன்றான


இயேசுபிரான் சிலுவையில் அரையப்பட்டதை நினைவு கூறும் புனித வெள்ளியை முன்னிட்டு வெள்ளிக்கிழமை (03) மட்டக்களப்பில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் இடம் பெற்றது. 

இதேவேளை மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலயத்திலும் பேராலய  பங்குத்தந்தை எஸ். ஜெயகாந்தன் தலைமையில் இந்த புனித வெள்ளி சிலுவைப்பாதை பாடுகளின் நினைவு நிகழ்வுகள் இடம் பெற்றது. 


புனித வெள்ளி தினத்தில் சிலுவையில் அறையப்பட்ட இயேசு பிரானின் உருவச்சிலை வாகன பேரணியாக இன்று காலை ஆலயத்தில் இருந்து ஆரம்பமான இந்த சிலுவைப்பாதை ஊர்வலம் ஆனது நகரின் பிரதான வீதிகளுடாக சென்று மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது. 

 இதன்போது தவக்காலத்தில் கிறிஸ்தவ மக்கள் இயேசு ஆண்டவரின் நினைவில் இருந்து வாழ்க்கையில் கைப்பற்ற வேண்டிய நெறிமுறைகள் பற்றிய விளக்கங்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன் பொலிஸ் பாதுகாப்புக்கு மத்தியில் புனித வெள்ளி ஜெப வழிபாடுகளும் பக்திபூர்வமாக இடம்பெற்றது. 

மட்டக்களப்பு தேற்றாத்தீவு

மட்டக்களப்பு தேற்றாத்தீவு புனிதயூதாததேயு தேவாலய சிலுவைப்


பாதை வெள்ளிக்கிழமை (03) களுவாஞ்சிகுடி அன்னை தெரேசா ஆலயத்தில் இருந்து களுவாஞ்சிகுடி, களுதாவளை தேற்றாத்தீவு ஆகிய ஊர்களின் பிரதான வீதியுடாக தேற்றாத்தீவு  புனித யூதாததேயு தேவாலயத்தை வந்தடைந்தது.

இயேசு துன்பங்கள் அனுபவித்து உயிர் துறந்த தினமாக பெரிய வெள்ளிக்கிழமையை கிறிஸ்தவர்கள் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கின்றார்கள்.


மனுக்குலத்தின் விடியலுக்காகவும் உலக மாந்தர்களின் மீட்புக்காகவும் அன்று கல்வாரியில் சிலுவைச் சாவினை ஏற்றுக் கொண்ட இயேசு கிறிஸ்துவின் திருப்பாடுகளின் வெள்ளியான இன்று புனிதயூதாததேயு திருத்தலத்தின் அருட்தந்தையின் தலைமையில் இடம்பெற்றது.

திருச்சிலுவைப்பாதையானது காலை 6.15 மணியளவில்  தேவாலயத்திலிருந்து பாதையாத்திரையாக ஆரம்பிக்கப்பட்டு தேற்றாத்தீவு புனிதயூதாததேயு திருத்தலத்தினை காலை 9.00 மணியளவில் சென்றடைந்தது. இந்நிகழ்வில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பக்கியுடன் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.













நன்றி வீரகேசரி 









வடக்கிற்கான புகையிரத சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளது ; யாழ் புகையிரத நிலைய பொறுப்பதிகாரி பிரதீபன்


04 Apr, 2026 | 06:02 PM

( எம்.நியூட்டன்)

வடக்குக்கான புகையிரத சேவைகள் எதிர்வரும் வியாழக்கிழமை (09)  மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக யாழ்ப்பாண புகையிரத நிலைய பொறுப்பதிகாரி தி. பிரதீபன் தெரிவித்துள்ளார். 

மஹவ முதல் ஓமந்தை வரையிலான புகையிரத பாதையில் ஐந்து புகையிரத பாலங்களை மாற்றியமைக்கவும், யானைகள் கடந்து செல்வதற்காக அமைக்கப்பட்ட சுரங்கப்பாதையை புனரமைக்கும் பணிகளை மேற்கொள்ளவும் ஏதுவாக வடக்குக்கான புகையிரத சேவைகள் கடந்த ஜனவரி மாதம் 26ஆம் திகதி முதல் நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் தமிழ் - சிங்கள புத்தாண்டினை முன்னிட்டு , எதிர்வரும் 09ஆம் திகதி முதல் புகையிரத சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன. 

புகையிரத சேவைக்கான முற்பதிவுகள் இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளமையால், பயணிகள் தமக்கான முற்பதிவுகளை மேற்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதேவேளை சுமார் இரண்டரை மாதங்களுக்கு பின்னர் புகையிரத சேவைகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளமையால் , புகையிரத கடவைகளை கடப்பவர்கள் பாதுகாப்பாக கடக்குமாறும் , புகையிரத பாதைகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.    நன்றி வீரகேசரி 








No comments: